Published : 05 Sep 2020 08:12 AM
Last Updated : 05 Sep 2020 08:12 AM
புத்தக வாசிப்பின் இடத்தை செல்பேசி, சமூக ஊடகங்கள் நிறையவே ஆக்கிரமித்திருக்கின்றன. செல்பேசி ஒன்றின் திரை அளவுக்குள் உள்ள பிரதியைப் படிக்கும் அளவுக்குத்தான் பலருக்கும் பொறுமை இருக்கிறது. அதைத் தாண்டி ஒரு கட்டுரை அளவுக்கு நீண்டால் பெரும்பாலானோர் படிப்பதில்லை. 2016-ல் அமெரிக்காவின் ‘கலைகளுக்கான தேசிய நிதிநல்கை அமைப்பு’ ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது. அதன்படி 1982-ல் ஒரு ஆண்டில் ஒரு நாவலாவது படித்தவர்களின் எண்ணிக்கை 56.9%-ஆக இருந்தது;
2015-லோ இது 43.1%-ஆகக் குறைந்துவிட்டது. பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை 1980-ல் தங்கள் பாடத்திட்டம் சாராத புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றைப் படிக்கும் பழக்கம் 60% பேரிடம் இருந்தது. இதுவே, 2016-ல் 16%-ஆகக் குறைந்துவிட்டது. 12-ம் வகுப்பு படிப்பவர்கள் செல்பேசியில் சாட் செய்தல், சமூக ஊடகங்களில் உலவுதல் போன்ற செயல்களுக்கு நாள்தோறும் 6 மணி நேரம் செலவிடுகிறார்கள். இதனால், ஆழமான வாசிப்பு குறைந்துபோய் அறிதிறன் செயல்பாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஒரு இணையதளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அதில் உள்ள இன்னொரு லிங்க் மூலம் இன்னொரு இணையதளத்துக்குச் செல்லுதல், ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும்போதே இடையில் சமூக ஊடகங்களைப் போய்ப் பார்த்துவிட்டுவருதல் இதனாலெல்லாம் கற்றல் திறனில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக எழுத்தறிவு நிபுணரும் நரம்பியலாளருமான மரியானே வூல்ஃப் எச்சரிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT