Last Updated : 08 Mar, 2020 11:54 AM

 

Published : 08 Mar 2020 11:54 AM
Last Updated : 08 Mar 2020 11:54 AM

நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்! - சு.வேணுகோபால் பேட்டி

‘எங்கள் தந்தையரான தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் தங்களது தோள்களில் எங்களை ஏற்றி உலகைக் காட்டினார்கள். நாங்கள் அடுத்த தலைமுறை. தந்தையர்களை எங்கள் தோள்களில் ஏற்றி இப்போது நாங்கள் அவர்களுக்குப் புதிய உலகைக் காட்டுகிறோம்!’ இப்படியொரு நம்பிக்கையை சு.வேணுகோபாலின் பேச்சில் மட்டுமல்ல, படைப்புகளிலும் பார்க்க முடியும். பத்திரிகையாளராகத் தொடங்கியது அவரது எழுத்துப் பயணம். தற்போது தனியார்க் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர். போடி, மதுரை, கோவை என வாழ்விடங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், மனதுக்குள் இன்னும் அவர் அம்மாப்பட்டி விவசாயிதான். ஜல்லிக்கட்டில் அவர் மும்முரமாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடியதிலிருந்து...

உறவுச் சிக்கல்களை எழுதுவது உங்கள் அடையாளமாகவே மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சமூகம், கலாச்சாரம் போன்ற கட்டமைப்புகளை மீறுவதால் நேரும் சிக்கல்களைத்தான் அதிகம் பேசுகிறீர்கள். அப்படிப் பேசும்போது காமமும் தவிர்க்க முடியாததாக ஆகிறது. இந்த விஷயங்கள் மீது உங்கள் அக்கறை குவிந்ததற்கு என்ன காரணம்?

குடும்பங்களில் காமம் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. உலகம் முழுக்கவுமே ஆண்-பெண் என்கிற உடைமையாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கௌரவம் சார்ந்த பிரச்சினையாகவும் அது பார்க்கப்படுகிறது. தன் தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்ட நம் சமூகத்தில் ஒருவன் அவனது மனைவி இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன? இந்த மனநிலை நம் பண்பாட்டு மரபோடு பின்னிப்பிணைந்திருக்கிறது; ஒரு சுமையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதை மீற முடியாது. அப்படி மீறும்போது எப்படி முரண் உருவாகிறது, அதனால் அவர்கள் அகங்காரமும் தன்மானமும் எப்படிக் குறைவுபடுகிறது, இச்சிக்கல்களால் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையும் எப்படிச் சிதைந்துபோகிறது என்பதைத்தான் சொல்லவருகிறேன். அந்தக் காமத்துக்குப் பின்னால் வன்முறையும் இருக்கிறது. மனிதனுடைய ஆழ் மனதுக்குள் இருக்கும் வன்மங்களையோ பொறாமைகளையோ நான் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறேன். ஒருவகையில் அது கண்டடைதல்தான். ஒரு கதையின் வழியாக, ஒட்டுமொத்தச் சமூகத்துக்குள் காமம் சார்ந்த விஷயங்களில் என்ன ரகசியம் இருக்கிறது, ஏன் இப்படி இருக்கிறார்கள், எதனால் மோதல் உருவாகிறது என்பதைக் கண்டடைவதாகத்தான் பார்க்கிறேன். மனித மனத்தின் சிக்கலான வேர்களை நெருங்கிவிடும் முயற்சிதான் என்னுடைய கதைகள்.

‘கூந்தப்பனை’ நாவலின் நாயகி ஒருகட்டத்தில், கணவன் பார்த்துக் கட்டிவைத்தவனுக்கு நேர்மையானவளாக மாறி விடுகிறாள். தான் உடைமாற்றுவதைக் காண நேரும் முன்னாள் கணவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறாள். ஏன் அவளால் இருவருக்கும் நேர்மையாக இருக்க முடியவில்லை?

டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனினா’ நாவலில் அப்படி ஒரு இடம் இருக்கிறது. ஆழ் மனதில் அவள் கணவனையும் நேசிக்கிறாள், காதலனையும் நேசிக்கிறாள் என்பது டால்ஸ்டாய் கண்டடைந்த இடம். ஆனால், ‘கூந்தப்பனை’யில் அவள் தன் முன்னாள் கணவனைத் தொல்லையாகப் பார்க்கிறாள். ஒருவேளை அவன் தன் நண்பனுக்கு மனைவியை மணம் முடித்து வைக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இருவருக்குமிடையே உடல் பரிமாற்றத்துக்கு அப்பால் நேசம் இருந்துகொண்டே இருந்திருக்கக்கூடும். தன் கணவன் ஆண்மையற்றவன் என்பதைப் புரிந்துகொண்டு அவன் ஒரு நண்பன் என்ற அளவுக்குக்கூட அந்த உறவு நகர்ந்திருக்கக்கூடும். ஆனால், மறுமணத்துக்குப் பிறகு, அவன் மீது கடுமையான எரிச்சலும் வெறுப்பும் அவளுக்கு உண்டாகிறது. இந்த இடத்தைச் சொல்வதன் வழியாக, தன் மனைவி நன்றாக வாழட்டும் என்று சொல்லக்கூடிய அவனது மகத்தான எண்ணத்துக்கு யதார்த்தமோ அல்லது மனித மன அமைப்போ ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. அதைத்தான் நான் பேச விரும்புகிறேன். முன்னாள் கணவன் தொடர்ந்து இங்கே இருந்தால் தன் வாழ்க்கையை அவன் கெடுத்துவிடக்கூடும் என்று நினைக்கிறாள். அவள் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். ஒரு பெண் வேறொரு பெண்ணாக மாறுவதை நான் சொல்கிறேன். டால்ஸ்டாய் வேறொரு விஷயத்தைச் சொல்கிறார்.

உங்கள் படைப்புகள் அனுபவம் சார்ந்தவை. உங்களுடைய அல்லது நீங்கள் கேள்விப்படும் அனுபவங்கள் உங்கள் படைப்புகளில் எப்படி வேலைசெய்கின்றன?

நீங்கள் ஏதோ ஒரு சின்ன சொல்லைச் சொல்கிறீர்கள். அதை ஒரு விதைபோல வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பின்னணியில் கதையைக் கட்டமைக்கிறேன். நான் யதார்த்தத்தை அப்படியே எழுதுகிறேன் என்று சொல்வார்கள். அப்படியல்ல. அது முழுக்க முழுக்கப் புனையப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கி அந்த இடத்தில் கதாபாத்திரங்கள் எப்படி எதிர்வினையாற்றும் என்பதாகப் புனைகிறேன். அந்தக் கதைகளில் வரும் பின்னணிகளை என் அனுபவங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

சின்ன சின்ன விவரங்களும் நுணுக்கமாக உங்கள் விவரணைகளில் வெளிப்படுகின்றன. உங்கள் உற்று கவனிக்கும் பண்பு புறச்சித்தரிப்புகளில் எப்படி உதவியிருக்கிறது?

காய்ச்சல் காலத்தில் மாட்டினுடைய நாக்கைத் தொட்டுப் பார்த்தீர்கள் என்றால் நொசநொசவென்று இருக்கும்; உங்கள் கையோடு பிய்ந்து வந்துவிடுவதாகத் தோன்றும். ஒரு மாட்டைப் பற்றி எழுதுகிறேன் என்றால் வெறுமனே மாடு வந்தது, அதற்கு ஜொல்லு வடிந்தது என்று எழுத மாட்டேன். கதைக்குள் நான் பார்த்த விஷயங்களையெல்லாம் சேர்த்தே சொல்லிவிடுகிறேன். கிராமம் சார்ந்த வாழ்க்கை இருக்கிறவர்களுக்கே இந்தப் பார்வை வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. ஒரு கள்ளிப்பால் எப்படி ஒழுகுகிறது என்பது கிராமத்தவனுக்குத் தெரியும். கள்ளிச்செடியில் இருக்கும் பூவைக் கரகரவெனச் சுத்தி, அதன் தண்டை ஒடித்துவிட்டுக் கொட்டினால் பத்துச் சொட்டு தேன் கொட்டும். பள்ளிக்குச் செல்லும் பையனைப் பற்றி ஒரு கதையில் பேசுகிறேன் என்றால் அவன் பூவை ஒடித்து, உருட்டி, உள்ளங்கையில் தேனைத் தட்டி அதை நக்கிவிட்டுப்போவான் என்று எழுதுவேன். இது அவனுடைய வாழ்க்கை. கிராமத்தாருடைய வாழ்க்கை புறத்தோடும் ஒரு அங்கமாக இருப்பதால் அதையும் சேர்த்து எழுத ஆசைப்படுகிறேன்.

‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ கதையில் தன் புருஷனைக் கொல்வதற்காகக் காத்திருக்கும் வேறொரு சாதியைச் சேர்ந்தவனின் வீட்டுக்குச் சென்று, கலவரமான சூழ்நிலையில் தொட்டிலைக் கொடுத்துவிட்டு, பிள்ளைக்குப் பாலூட்டிவிட்டும் வருகிறாள் சுப்பம்மாள். எப்படி அவளால் முடிந்தது?

நான் எழுதவந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் பெரும் கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. கொலைக்குக் கொலை, வன்புணர்வுக்கு வன்புணர்வு என்று தொடர்ந்து மோதிக்கொண்டே இருந்தன. இப்படியான சூழ்நிலையிலும்கூட இரண்டு முரண்பட்டச் சமூகங்களுக்கு இடையே மேம்பட்ட நல்லுறவும் இருந்தது. அதனால்தான், துணிந்துவந்து பால் கொடுத்துவிட்டுப்போகிறாள். மேற்பரப்பில் இவ்வளவு வன்முறைகள் நடந்துகொண்டிருந்தாலும் கீழ்ப்பரப்பில் அன்பு, காதல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைச் சொல்லத்தான் இந்தச் சிக்கலைக் கதையாக்க நினைத்தேன்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த வீட்டுக் குழந்தைகளுக்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ‘தொட்டில் கட்டிப் பாலூட்டுவதான’ இச்சடங்கு முறை வழக்கத்தில் இருந்ததா?

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பான தொன்மம் இது. இஸ்லாமியருக்கும் இந்து அரசருக்கும் இடையே இச்சடங்கு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தொன்மத்தைக் கதைக்கு ஏற்றவாறு நான் வளைத்துக்கொண்டேன்.

அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகும் இலக்கியங்களை ஆவணமாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு எனும்போது இதுபோன்ற தொன்மங்கள், சடங்குகள், பழக்கவழக்கங்களை எந்த அளவுக்கு நாம் கதைகளுக்காக வளைத்துக்கொள்ள முடியும்?

வரலாற்றுத் தகவலாக இருக்கும்பட்சத்தில் நாம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கலவரத்தில் இப்படியாக அன்பு மலர்ந்து என்ற விஷயம் வரலாறாக இல்லாமல் சொல்வழிக் கதைகளாகத்தான் இருந்தது. அதற்கு ஒரு புனைவுத்தன்மை வந்துவிடுகிறது. அதைத்தான் நான் வேறொரு புனைவாக மாற்றிக்கொண்டேன்.

‘தொப்புள்கொடி’ கதையில் வரும் புத்தி சுவாதீனமற்ற கார்த்திகா... அவளுடைய குழந்தைக்கு எது நல்லது கெட்டது என்று அவளுக்குத் தெரிவதில்லை. அவளுடன் அந்தக் குழந்தை இல்லாமல் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கும். அதை மறுத்துவிடுகிறாள். தன்னுடன் குழந்தை இருக்க வேண்டும் என்கிற தாய்மையின் ஆதார குணம்தான் அவளிடம் இருக்கிறது. இது பற்றி?

இந்தக் கதைக்குப் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. நீண்ட விடுமுறையொன்று வந்தது. 22 நாட்கள். ஒரு நாளைக்கு ஒரு கதை என்று எழுதினேன். ஒவ்வொரு நாளும் பதிப்பாளர் வசந்தகுமாருக்கு அனுப்பிவைத்தேன். “இந்தக் கதை பரவாயில்லை வேணுகோபால்” என்பார். இன்னொரு கதை அனுப்புவேன். “அதைவிட கொஞ்சம் பரவாயில்லை” என்பார். இன்னொரு கதை இன்னொரு கதை என வேக வேகமாக எழுதினேன். ஒருநாள், “உன் கிராமத்துக்கே உரிய அந்த ஃபோர்ஸ் இன்னும் வரவில்லையே” என்றார். அப்போது இரண்டு நாள் விடுமுறைதான் மிச்சம் இருந்தது. “ஒரு கதை எழுதலாம். ஆனால், நான் எழுத நினைக்கும் கதையை ஏற்கெனவே கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார்” என்றேன். வசந்தகுமார், “கி.ராஜநாராயணன் கி.ராஜநாராயணன் கதையை எழுதட்டும். வேணுகோபால் வேணுகோபால் கதையை எழுது” என்றார். அப்போது எழுதியதுதான் ‘தொப்புள்கொடி’. என்ன நிலைமையில் இருந்தாலும் தன் உடலிருந்து உருவாகிவந்த உயிரை ஒருபோதும் எந்த உயிரினமும் விலக்குவதே கிடையாது. அறிவுரீதியான விஷயத்திலிருந்து நீங்கள் விலகியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட முடியாது. தாய்மை என்பது இயற்கையின் ரகசியம்தான். ஒரு கங்காருவோ, ஒரு சிங்கமோ குட்டிபோடுகிறது என்றால் அது அக்குட்டியிடமிருந்து விலகிப் போகவே போகாது. அந்த உறவானது எல்லா உயிர்களுக்கும் இருக்குமென நம்புகிறேன். அது ஒரு கிறுக்கிக்கும் இருக்கும். உணர்வுபூர்வமான அந்த ஆதி உணர்வை நான் சொல்ல நினைக்கிறேன். தாய்க்கும் பிள்ளைக்குமான இந்த மகத்தான உறவு ஒரு மகத்தான அற்புதம்.

உங்கள் கதைகளில் வரும் பெண்கள் மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய விதவிதமான வாழ்க்கை முறை, துயரங்கள், உளச்சிக்கல்களை விரிவாகப் பேசியிருக்கிறீர்கள். பெண்கள் எப்படி இவ்வளவு நுணுக்கமாக உங்களிடம் வெளிப்படுகிறார்கள்?

என்னைத் தூக்கி வளர்த்தது ஒன்றுவிட்ட அக்கா ராஜாத்தி. பிற்காலத்தில், ஒரு கிராமச் சண்டையின்போது எனது 23-25 வயது வரை ஊர் உலகத்துக்குத் தெரியாமல் என்னை மறைத்து வைத்துப் பாதுகாத்தாள். அப்படி எல்லாம் அவள் பார்த்திருக்கவில்லை என்றால் நான் இப்படி ஒரு எழுத்தாளனாக ஆகியிருக்க முடியாது. இது ஒரு விஷயம். பள்ளி முடிந்து வந்தவுடன் களை வெட்டும் பெண்களுடன் சேர்ந்துகொள்வேன். அவர்களோடெல்லாம் இருந்ததால் என்னை அறியாமலேயே அப்பெண்களை உற்று கவனித்திருந்திருக்கலாம். எழுதும்போது அது தன்னியல்பாகவே வந்துவிடுகிறது. ஆனால், முதல் நாவலான ‘நுண்வெளி கிரகணங்கள்’ எழுதும்போது அந்தச் சிறு வயதில், ‘ஒரு பெண்ணே பெண்ணைப் பற்றி எழுத முடியாத அளவுக்குப் பெண்ணைப் பற்றி நான் எழுத வேண்டும்’ என்று நினைத்தேன். தோட்டத்தில் வேலை பார்த்த அத்தனை அக்காமார்களும் அண்ணிமார்களும் பாட்டிமார்களும் என் ஆளுமையை உருவாக்கியிருக்கிறார்கள் எனலாம்.

பெண்களுக்கு ஆதரவான குரல்தான் உங்களுடையது. ஆனால், ‘நிலம் எனும் நல்லாள்’ நாவலில் வரும் பெண் உங்கள் வழக்கமான நிலைப்பாட்டுக்கு நேரெதிராக நடந்து கொள்கிறாளே?

எல்லாப் பெண்களும் அன்பானவர்களாக, கனிவானவர் களாகவெல்லாம் இருப்பதில்லை. மூர்க்கமாவும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூர்க்கமான பெண்களை வேணுகோபால் குறைவாக எழுதியிருக்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

‘நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்’ என்று சொல்கிற நபர் நீங்கள். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?

ஆமாம், நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம். மஞ்சள் விளைவிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது ஒன்பது மாத வெள்ளாமை. 21-வது நாளில் அது முளைவிடும். மெல்ல மெல்லக் களை வெட்டி, உரம் போட்டு அந்தப் பயிரை உருவாக்கிக்கொண்டே வருகிறீர்கள். அது நன்றாக விளைந்து முழு ஆற்றலோடு நிற்கும்போது உங்களால் வீட்டுக்கு வர முடியாது. பருவப் பெண்ணான பதினெட்டு வயது பேரழகியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும்! நல்ல விளைச்சலைக் காணும் மகிழ்ச்சி இருக்கிறதல்லவா? என்னைப் பொறுத்தவரையில், அந்த மகிழ்ச்சிக்கு ஈடான ஒன்றை ஒரு நாவலோ ஒரு சிறுகதையோ தராது. ஜெகஜெகவென ஜொலிக்கும் விளைச்சலை இரவு நேரத்தில் கட்டி அணைத்துக்கொள்வேன். அதன் கால்களுக்கெல்லாம் முத்தம் தருவேன். ஒரு கதைக்கு முத்தம் கொடுக்க முடியுமா?

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x