Published : 01 Feb 2020 08:58 AM
Last Updated : 01 Feb 2020 08:58 AM

நூல் வெளி

பிறமொழி நூலகம்

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
அதுல்ய மிஸ்ரா
ரூபா வெளியீடு
புதுடெல்லி -110002.
விலை: ரூ.295

சேலத்தில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் போஸ், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றுகிறார். மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதியில் மோரே என்ற சிற்றூரில் அன்றைய பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் அகதிகள் பெருமளவில் வசித்துவருகின்றனர். திருமணமாகாத ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டுவரும் தமிழர் ஒருவர், தொடர்ந்து செடிகளை வளர்த்து பொட்டல் காடுகளை உருமாற்றுகிறார். இவரைச் சந்தித்த பிறகு அந்த அதிகாரியிடம் ஏற்பட்ட மனமாற்றம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாவலாக்கியிருக்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா. சுற்றுச்சூழல் குறித்து அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் இது.
- வீ.பா.கணேசன்

நூல்நோக்கு

நிலமடந்தைக்கு
நரோலா
தடாகம் வெளியீடு
திருவான்மியூர், சென்னை-41.
தொடர்புக்கு: 89399 67179
விலை: ரூ.100

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை நிலவுரிமை பெறுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தம்பதியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இளமைக் காலம் தொடங்கி இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் வரை என அவர்களுடைய எழுபதாண்டு கால சமூக வாழ்க்கையைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கான புத்தகம் இது.

நம் வெளியீடு

மனசு போல வாழ்க்கை 2.0
ஆர்.கார்த்திகேயன்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ரூ.100

மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும்.

நெல்லை, திருப்பூரில் புத்தகக்காட்சி

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், பபாசி இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி பாளையங்கோட்டையிலுள்ள வஉசி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 1) தொடங்கி பிப்ரவரி 10 வரை நடக்கிறது.

‘இந்து தமிழ்’ அரங்கு எண்: 92.

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 17-வது திருப்பூர் புத்தகக்காட்சி, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை திருப்பூர் மங்கலம் ரோட்டிலுள்ள கேஆர்சி சிட்டி சென்டரில் நடைபெறுகிறது. சென்னை புத்தகக்காட்சியைத் தவறவிட்டவர்களெல்லாம் திருநெல்வேலி, திருப்பூருக்குப் படையெடுக்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x