Published : 31 Dec 2019 08:40 AM
Last Updated : 31 Dec 2019 08:40 AM

பிரம்மாண்டமான புத்தாண்டுக் கொண்டாட்டம் தயார்... புத்தகங்களோடு வாழ்த்துச் சொல்ல நீங்கள் தயாரா? - டிச.31, ஜன.1 இரு நாட்களும் 50% வரை தள்ளுபடி; இன்று நள்ளிரவிலும் கடைகள் திறந்திருக்கும்

புத்தாண்டு நாளைப் புத்தகங்களுடன் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், உருவான ‘புத்தகங்களுடன் புத்தாண்டு இயக்கம்’ இந்த ஆண்டு பெரிய அளவில் விரிந்திருக்கிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே இதுவரை நடந்துவந்த சூழல் மாறி, சென்னை தொடங்கி குமரி வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இந்த ஆண்டு புத்தக இரவுக் கொண்டாட்டம் நடக்கிறது. புத்தக விலையில் 10% முதல் 50% வரை பதிப்பகங்கள் தள்ளுபடியை அறிவித்திருக்கின்றன.

புத்தாண்டு அன்று வாசகர்கள் வெளியில் சந்திக்கும் முதல் நபருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசளித்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும். இப்படி ஒரு இயக்கத்தை ‘இந்து தமிழ்’ முன்மொழிந்ததும் ‘தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்’ (பபாசி) ஆர்வத்தோடு தன்னையும் இதில் இணைத்துக்கொண்டது. ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் ‘புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்’ விரிவான ஏற்பாடுகளோடு களைகட்டியிருக்கிறது.
தென்னிந்தியப் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) வழக்கம்போல மாநிலம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையாளர்களிடம், “குறைந்தபட்சம் 10% தள்ளுபடி வழங்குங்கள்; டிச.31 காலை தொடங்கி ஜன.1 இரவு வரை கடைகளைத் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இது நீங்கலாக, பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் தத்தமது அளவில் தனித்தனி திட்டங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில்…

தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 31 நள்ளிரவில் புத்தகக் கடைகளைத் திறந்துவைப்பதற்கான, வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான பாரதி புத்தகாலயம். 10% - 50% தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது. சென்னை, செங்கை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தர்மபுரி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் கொண்டாட்டத்துக்குத் திட்டமிட்டிருக்கிறது ‘பாரதி புத்தகாலயம்’. இன்னொரு முன்னணி நிறுவனமான ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு, ஊட்டி, ஓசூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் கொண்டாட்டத்துக்குத் திட்டமிட்டிருக்கிறது. கோவையில் ‘விஜயா பதிப்பகம்’, பொள்ளாச்சியில் ‘எதிர் பதிப்பகம்’ பிரத்யேகமாகக் கொண்டாடவிருக்கின்றன. இது தவிர, வேறு பல பதிப்பகங்களும் கரம்கோத்திருக்கின்றன. மேலும், புத்தக இரவுக் கொண்டாட்டத்தில் குழந்தைகளைக் கதைசொல்ல வைக்கவும், புத்தக விமர்சனம் செய்யச் சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள். புத்தக விற்பனைக்காகக் கடைகளைத் திறந்துவைப்பதோடு மட்டுமல்லாமல் சிறப்பு நிகழ்ச்சிகளும் உண்டு. எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு, நாடகங்கள், உரையாடல்கள், புத்தக அறிமுகக் கூட்டம் எனத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சென்னையில்…

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ‘உயிர்மை’ பதிப்பகம் தனது சென்னை அலுவலகத்தில் எழுத்தாளர்களோடு கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி பதிப்பக’மும் 15% தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வழக்கம்போல் நூல் வெளியீடுகள், உரைகள், திரையிடல்களுடன் சிற்றுண்டி, புத்தாண்டு கேக் எனக் கூடுதல் சுவையுடன் கொண்டாட அழைப்புவிடுத்திருக்கிறது. ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விருட்சம், பெரியார் புத்தக நிலையம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பதிப்பகங்களும் புத்தக விற்பனையாளர்களும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டார்கள்.

வந்துவிட்டது 2020. ‘புத்தகம் வாங்குவோம் புத்தாண்டைக் கொண்டாடுவோம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் புத்தாண்டை மட்டுமல்ல; இனிவரும் எல்லாப் புத்தாண்டுகளையும் கொண்டாடுவோம்! வளமான ஒரு புத்தகக் கலாச்சாரத்துக்கு வித்திடுவோம்!

உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை?- சமூக வலைதளங்களில் பகிருங்கள்!

2019-ல் நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் என்னென்ன? அவற்றை எழுதிய ஆசிரியர்கள், விலை, பதிப்பகம், பிடிக்கக் காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களின் பட்டியலையும் கேளுங்கள். குறைந்தது மூன்று புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றிப் பேசுவதையும் விவாதிப்பதையும் ஒரு விளையாட்டாக முன்னெடுப்போம்; கலாச்சாரமாக மாற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x