Published : 24 Aug 2019 09:56 AM
Last Updated : 24 Aug 2019 09:56 AM
படைப்பு, பதிப்பு, ஆசிரியர் பணி என்று பன்முக ஆளுமையாக இருக்கும் கவிஞர் தி.பரமேசுவரிக்கு 2019-க்கான கவிஞர் பாலா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று சென்னையில் நடந்த விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கூடவே, பாலாவின் வாழ்க்கையை சாகித்ய அகாடமிக்காகப் புத்தகமாக்கிய சேதுபதிக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
நீரை விதைப்போம்
மருத்துவர் எம்.மணிவண்ணனின் ‘நோய்களின் தாய்’ எனும் சர்க்கரை நோய் பற்றிய நூல் வெளியீட்டு விழா கடந்த வாரம் காரைக்குடியில் நடைபெற்றது. காரைக்குடி பகுதி நகரத்தார்கள் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்பை வீடுகளிலும் குளம், ஊருணிகள் போன்றவற்றை ஊரிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்தியதால், அங்குள்ள ‘சம்பை ஊற்று’ தற்போதும் தண்ணீரை வழங்கிவருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நூல் வெளியீட்டு விழாவோடு இணைந்து, ‘பூமிக்குள் நீரை விதைப்போம்’ என்ற விழிப்புணர்வுக் கண்காட்சியையும் 3 நாட்கள் நடத்தியுள்ளார் எம்.மணிவண்ணன். இந்தக் கண்காட்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பார்வையிட்டனர்.
சேற்று நடை ராணி
லாரா மைக்லெம் ரொம்பவும் வித்தியாசமான எழுத்தாளர். அவருடைய எழுத்துக்கள் சேற்றில் பிறந்தவை. ஆம்! தேம்ஸ் நதிக்கரையில் அலை தொட்டுப்போகும் சேற்றினூடே நடப்பதில் அவருக்கு வேட்கை அதிகம். அப்படி நடக்கும்போது, சேற்றின் அடியிலிருந்து கிடைக்கும் அபூர்வமான பொருட்களைச் சேகரிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். அந்தச் சேகரிப்புகளையும் நடையனுபவத்தையும் கொண்டே ‘சேற்று நடை’ (மட்லார்க்கிங்) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். “எனக்கு ராஜாக்கள், ராணிகளின் வரலாறு குறித்து ஆர்வம் ஏதும் இல்லை. இந்தப் பொருட்களெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்தியவை. வரலாற்றால் மறக்கப்பட்ட இந்த மனிதர்கள் மீதுதான் எனக்கு அக்கறை. அவர்களின் வரலாறுதான் உண்மையான வரலாறு” என்கிறார் லாரா மைக்லெம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT