

சென்னை மாநகரில் நெரிசல் நடந்துபோகிற ரோட்டில் மட்டும் அல்ல மக்களின் வாழ்க்கையிலும்தான். சமூகத்தின் அடித் தளத்தில் வளைந்து நெளிந்து வாழ்க்கையை நடத்தும் அவர்களின் வாழ்வில்தான் எத்தனை விதமான உணர்வுகள்?அதிலும் சென்னையின் வடசென்னையில் அதிகமாகச் சாமான்ய மக்கள் வாழ்வதால் வாழ்க்கையும் அங்கே வேறுபடுகிறது.
அத்தகையவர்களில் ஒருவரான பாக்கியம் சங்கர் தன்னைச் சுற்றிச் சுழன்றவர்களை அப்படியே கதாபாத்திரங்களாக வடித்திருக்கிறார். மதுவும் பாலுறவும் இயல்பாகக் கலந்து ஓடும் இந்த உண்மைக் கதைகளில் கழிப்பிடக் காண்டிராக்டர் ஆராயி, அவரது காதலர் மயானத் தொழிலாளி கலியன், பர்மா பஜார் பாலியல் தொழிலாளி இல்லாமல்லி, என வருகிற பாத்திரங்கள் எல்லாம் நம்முன் நடமாடுபவர்கள்தான். ஆனால், அவர்களின் வாழ்க்கைக்குள்ளே இருக்கிற அழகியலும் துன்பங்களும் நாம் அறியாதவை.
ஒரு திரைப்படத்தில் பிச்சைக்காரர் களை நடிக்க வைப்பதற்காக எடுத்த முயற்சிகளின் அனுபவங்களும் கதையாகியிருக்கிறது. அதில் மசூதியில் பாயாகவும் கோயிலில் சைவப்பழமாகவும் இருப்பவர் இருக்கிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை உதறித்தள்ளியவர் இருக்கிறார்.
சென்னையின் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதைகள்.
- நீதி
நான் வட சென்னைக்காரன்
ஆசிரியர்- பாக்கியம் சங்கர்
விலை: ரூ 160
வெளியீடு: பாவைமதி பதிப்பகம்
சென்னை- 600 081
தொடர்புக்கு: 9380164747.