Last Updated : 11 Jul, 2015 09:59 AM

 

Published : 11 Jul 2015 09:59 AM
Last Updated : 11 Jul 2015 09:59 AM

நான் நாவல் எழுத மாட்டேன்: மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி நேர்காணல்

மொழிபெயர்ப்பை ஒரு படைப்புச் செயலாகக் கருதும் மிகச் சில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஜி. குப்புசாமி. மூலப்படைப்பின் பொருளை மட்டுமல்லாமல் அதன் தொனியையும் கொண்டுவருவதற்கு மெனக்கெடுபவர். ஓரான் பாமுக்கின் நூல்கள், ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், அருந்ததி ராயின் நாவல் என்று தமிழுக்கு அவர் கொண்டுவந்த புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓரான் பாமுக்கின் ‘வெண்ணிறக் கோட்டை’ மொழிபெயர்ப்பை முடிக்கும்தறுவாயில் இருக்கும் அவருடன் ஒரு நேர்காணல்…

இலக்கியம், மொழிபெயர்ப்பில் ஆர்வம் உருவானது எப்படி?

இலக்கிய வாசிப்பிலும் படித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் இருந்த ஆர்வம்தான் தொடக்கப்புள்ளி.

மொழிபெயர்ப்பின் பக்கம் உங்களை இழுத்துவந்தது எது?

2002 குஜராத் கலவரத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் கே.என். பணிக்கர், ஆ.இரா. வேங்கடாசலபதி, ஞாநி போன்றோர் பங்கேற்ற கண்டனக் கூட்டம் நடந்தது. அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக அவுட்லுக் இதழில் அருந்ததி ராய் எழுதிய நீண்ட கட்டுரையை மொழிபெயர்த்து கூட்டத்தில் சிறு நூலாக வெளியிடலாம் என்று தீர்மானித்து பவா செல்லதுரை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார் அதுதான் ஆரம்பம். பல வருடங்களாக வாசித்து வாசித்து மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பதைவிட மொழி பெயர்த்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதின் இன்பம் அப்போதுதான் புரிந்தது.

மொழிபெயர்ப்பில் உங்களுக்கான கோட்பாடு என்ன?

‘கேட்சிங் தி லெட்டர் பை தி ஸ்பிரிட் ஆஃப் இட்’ என்பதுதான் எனது தாரக மந்திரம். மூலப் படைப்பில் இருந்து எதையும் திருத்துதல், மாற்றுதல், வாசகங்களை இடம் மாற்றிப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்ய மொழிபெயர்ப்பாளருக்கு உரிமையே கிடையாது. மூல ஆசிரியருக்கு மொழிபெயர்ப்பாளர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். அவரது தொனி, மொழி, நடை என்று எல்லாவற்றையும் அப்படியே கொண்டுவர வேண்டும். அதே சமயம், மொழிபெயர்ப்பு என்பது 100% முழுமையானதாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்வேன். ஆனால், அந்த 100%-ஐ நோக்கிய பயணம்தான் மொழிபெயர்ப்பாளர் செய்ய வேண்டியது. அடிக்குறிப்புகளில் எனக்கு உடன்பாடு கிடையாது.மூலப் படைப்பை விட மொழிபெயர்ப்பு நன்றாக இருப்பதாக யாரேனும் சொன்னால் அவர் மூலப் படைப்பைச் சரியாகப் படிக்கவில்லை என்று அர்த்தம்.

படைப்புகளை மொழிபெயர்ப்பதிலும், அல்புனைவுகளை (non-fiction) மொழிபெயர்ப்பதிலும் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன?

அயல் மொழிப் புனைவுகளை மொழிபெயர்க்கும் மொழி பெயர்ப்பாளர்கள் மிமிக்ரி ஆர்டிஸ்ட்போல படைப்பாளியின் குரலை தனது பிரதியில் கொண்டுவர வேண்டும். அல்புனைவுகளை மொழிபெயர்க்கும்போது ஆசிரியரின் தொனி, நடை போன்றவற்றைவிட சொல்லவரும் கருத்தைத் தெளிவாக, தேவைப்பட்டால் கூடுதல் விவரத்தையும் அளித்து, மொழிபெயர்க்க வேண்டும். ராமச்சந்திர குஹா, கே. என். பணிக்கர், பி. சாய்நாத் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளில் கருத்துகள்தானே முக்கியம். ஆனால் படைப்பாளிகள் எழுதும் அல்புனைவுகளுக்கு இது பொருந்தாது. அருந்ததி ராயின் கட்டுரைகளையும், பாமுக்கின் ‘இஸ்தான்புல்’லையும் கலைப் படைப்புகளாகத்தான் கருதி மொழிபெயர்க்க வேண்டும்.

மொழிபெயர்ப்பின்போது அந்நிய மொழியின் மரபுத் தொடர்கள் என்னென்ன சவால்களைத் தரும்?

அயல்மொழி மரபுத்தொடர்களின் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பதைவிட அபத்தம் வேறில்லை. அச்சொற்றொடர் உணர்த்தும் பொருளுக்குத் தக்கவாறு வாக்கியத்தை அமைப்பதே உத்தமம்.

மொழிபெயர்ப்பில் உங்கள் முன்னோடி யார்?

தமிழில் ஆர். சிவகுமார், வெ.ராம், சி. மணி போன்றோர் மிகவும் சிரத்தையான மொழிபெயர்ப்பாளர்கள். ஆனால் மொழிபெயர்ப்பு குறித்த நுட்பங்களை, உத்திகளைக் கற்றுத்தந்த நண்பர், வழிகாட்டி சா.தேவதாஸ். அவரது மொழிபெயர்ப்புகளைவிடவும், நேரடியாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என்னைச் செழுமைப்படுத்தின என்பேன்.

மொழிபெயர்ப்பு படைப்புகளைப் பொறுத்தவரை, தமிழ் சரளமாக இருப்பதில்லை என்று பொது வாசகர்களின் ஒரு தரப்பு கருதுகிறதே. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மொழிபெயர்ப்பு கடினமாக இருப்பதையும், எளிதாக இருப்பதையும் தீர்மானிப்பது மூலப் படைப்புதான் என்பதைப் பல தீவிர வாசகர்கள்கூடப் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆயாசமளிக்கிறது. ஓர் இலக்கியப் படைப்பை மொழிபெயர்ப்பது என்பது மறுகூறலாக இருக்கக் கூடாது. சிக்கலான வாக்கிய அமைப்பிலும், நனவோடை உத்தியிலும் எழுதப்படும் எழுத்தை, நீர்த்துப்போன எளிமையான நடையில் பள்ளி ஆசிரியன் வேண்டுமானால் பாடம் நடத்தலாம். மொழிபெயர்ப்பு என்பது ஓர் இணையான படைப்பாக்கம். வாசகரைப் படைப்பாளியிடம் மொழிபெயர்ப்பாளர் கொண்டுசேர்க்க வேண்டும். படைப்பாளியை வாசகரிடம் கொண்டுவருதல் இலக்கிய மொழிபெயர்ப்பாகாது.

ஓரான் பாமுக் படைப்புகளை மொழிபெயர்ப்பதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்களை அவர் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறார்?

ஓரான் பாமுக்கை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எஸ். ராமகிருஷ்ணன். வாசிக்கத் தொடங்கியதும் அவரது எழுத்துகள் என்னை முழுமையாகப் பீடித்துக்கொண்டுவிட்டன. எந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழி பெயர்க்கலாம் என்று ‘காலச்சுவடு' கண்ணன் என்னிடம் கேட்டபோது நான் ஓரான் பாமுக்கின் பெயரைத்தான் சொன்னேன். அவரது ‘மை நேம் இஸ் ரெட்’ நாவலை முதலில் மொழிபெயர்த்தேன். துருக்கிக்கும் இந்தியாவுக்கும் ஆன்மரீதியாகப் பிணைப்பு இருக்கிறது. இரு நாடுகளின் நிலப்பரப்புகள் முற்றிலும் வேறானவையாக இருக்கலாம். ஆனால், துருக்கியர்களின் மனப்பரப்பு இந்தியத்தனமானது என்றே சொல்வேன். பாமுக்கின் மன உலகம் இயங்கும் விதம் எனக்குப் பரிச்சயமாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பு படைப்புகள் சமூகத்தில் எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

ஒவ்வொரு மொழியிலும் அயல் மொழிப் படைப் புகளின் மொழிபெயர்ப்புகள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றன. தமிழில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புகளால் இலக்கியப் படைப்புகள் செழுமையடைந்திருக்கின்றன. க.நா.சு., பிரம்மராஜன், ராம் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பலர் அயல் மொழிப் படைப்புகளை மொழிபெயர்த்தளித்ததால்தான் தமிழில் நவீன இலக்கியம் தனது அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைத்திருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன். தேவிபாரதி சமீபத்தில் எழுதிய ‘நிழலின் தனிமை’ எனும் குறுநாவல் சர்வதேசத் தரத்திலானது. இந்த நாவலுக்கான வடிவமும், குரலும் நீண்ட காலமாகப் பிடிபடாமல் இருந்ததாகவும், ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’ நாவலின் மொழிபெயர்ப்பைப் படித்த பின்னர்தான் நாவலின் தொனி பிடிபட்டதாகவும் என்னிடம் சொன்னார்.

நீங்களாக எழுதும் திட்டம் இருக்கிறதா?

இதுவரை அந்தத் திட்டம் இல்லை. ஏனெனில் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய என் அபிமான புத்தகங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஓரான் பாமுக்கையோ, பான்வில்லையோ, கார்வரையோ மொழிபெயர்க்கும்போது அவர்களுடைய ஆன்மாவில் கலந்திருக்கும் இன்பமே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. எனினும் ஒரு நாவல் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் அதை எழுதக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x