நாவல்: அசடு

நாவல்: அசடு
Updated on
1 min read

புத்தக அறிமுகம்

நூலாசிரியர்: காசியபன்

நாவல் யாரைப் பற்றியது?

வெற்றிகரமாகவும் சாமர்த்தியமா கவும் சமூகத்தில் கவுரவமாகவும் வாழ்வதுகுறித்துப் பல அறிவுரைகளும் முன்னுதாரணங்களும் எப்போதும் சொல்லப்பட்டுவருபவைதான். பெரும் பாலான மனிதர்கள், சமூகத்தில் நிலவும் பொதுநடை முறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். வாழ்நாள் முழுக்கத் திட்டமோ உத்தியோ சாமர்த்தியமோ இல்லாமல் விதிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றால் அதிர்ஷ்டசாலி என்றும், தோல்வியடைந்தால் அசடு என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அப்படிப்பட்ட அசடு எனக் கருதப்படும் கணேசன் என்ற மனிதனின் கதை இது. வாழ்நாள் முழுவதும் ஓட்டல் பரிசாரகனாகவே வேலைபார்த்தவன். ஆனால், சாம்பார் வாளியைக் கூடக் கையாளத் தெரியாமல், சாப்பிட வருபவரிடம் வசை வாங்குபவன். லௌகீக சாமர்த்தியங்களுக்கு வெளியே எத்தனையோ அனுபவங்களையும் யாத்திரைகளையும் மேற்கொண்ட களங்கமற்ற கணேசன் ஒரு ஆலயத்தின் வாசலில் அநாதையாக இறந்துபோகிறான்.

நாவலின் சிறப்பம்சம் என்ன?

1978-ல் வெளிவந்த இப்படைப்பு, தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, நகுலன், வெங்கட் சாமிநாதன் போன்றோரால் பாராட்டப்பட்டது. இதை எழுதிய காசியபன் தனது 53 வயதில் தமிழில் எழுதத் தொடங்கினார். தமிழ் நாவல்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று கணேசன்.

நாவல் பற்றி

எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு என்கிறார் நகுலன்.

அசடு, காசியபன்

வெளியீடு: விருட்சம்,

6/5, போஸ்டல் காலனி, முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை- 33.

விலை: ரூ.60/- தொடர்புக்கு: 044- 24710610

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in