Published : 26 Feb 2015 09:37 AM
Last Updated : 26 Feb 2015 09:37 AM

வீடில்லா புத்தகங்கள் 23: வாழ்க்கைத் துணை!

ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே அதிகம். படிப்பையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்துவிடுவது இல்லை.

குடும்பப் பிரச்சினைகளின் காரண மாக இலக்கியம் படிப்பதை கைவிட்ட வர்கள், எழுதுவதை நிறுத்திக்கொண்ட வர்கள் பலரை நான் அறிவேன். பல எழுத்தாளர்கள் குடும்பத்தின் கோபம், சண்டைகளை மீறியே தனது எழுத்து செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகி றார்கள். அரிதாக சிலருக்கே நல்ல துணையும் எழுதுவதற்கான இலக்கியச் சூழல்கொண்ட வீடும் அமைகிறது.

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது மனைவியோடு சண்டையிட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய போது அவருடைய வயது 82.

கவிஞர் டி.எஸ். எலியட் கருத்துவேறு பாட்டால் மனைவி விவியனை விவாக ரத்து செய்துவிட்டார். ஆனால், எலியட் எந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் விவியன் அங்கே தேடிவந்து முன்னிருக்கையில் அமர்ந்தபடியே, ‘‘நீ ஒரு பொய்யன்…” என்ற அட்டையைத் தூக்கிப் பிடித்து கலாட்டா செய்வார்.

‘இழந்த சொர்க்கம்’ (பேரடைஸ் லாஸ்ட்) என்கிற காவியம் படைத்த மகாகவி மில்டன், தனது 35-வது வயதில் மேரி பாவல் என்ற அரசக் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். மனைவியின் கடுமையான நடத்தையால் அவதிப்பட்ட மில்டன், தனது இறப்புவரை தான் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறவே இல்லை என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.

சார்லஸ் டிக்கன்ஸ் தன் மனைவி கேதரின் கண்ணிலேயே படக் கூடாது என்று படுக்கை அறை நடுவில் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியிருந்தாராம்.

சிந்தனையாளர் சாக்ரடீஸின் மனைவி ஜாந்திபி, ஒருநாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரைத் தூக்கி ஊற்றினாள். அதற்கு ‘முன்பு இடி இடித்தது… இப் போது மழை பெய்கிறது’ என்று சாக்ரடீஸ் சொன்னதாக ஒரு கட்டுக் கதை நெடுங் காலமாகவே இருந்து வருகிறது.

இப்படி எழுத்தாளர்களின் மோசமான மனைவிகுறித்து நிறைய சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் உண்மை கலந்த பொய்கள்!

சாக்ரடீஸ் ஜாந்திபியைத் திருமணம் செய்து கொள்ளும்போது அவருடைய வயது 50. ஜாந்திபிக்கோ 20 வயது. ஜாந்திபி வறுமையின் காரணமாகவே சாக்ரடீஸைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். குடியும், கூத்தும், பெண் தொடர்பும் கொண்ட கிரீஸ் நாட்டு ஆண்களைப் போலவே சாக்ரடீஸ் நடந்துகொண்டார் என்பதால் தான் அவர்களுக்குள் சண்டை என்றும் ஒரு தரப்பு வாதிடுகிறது.

ஜாந்திபி சாக்ரடீஸோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றிருக் கிறாள். மரண தண்டனை விதிக்கப்பட்ட சாக்ரடீஸைப் பார்க்க சிறைக்கு வரும்போது மூன்றாவது கைக் குழந்தையோடு ஜாந்திபி வந்திருந்தாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. சாக்ரடீஸ் சாகும்போது அவருக்கு 71 வயது.

சாக்ரடீஸீன் மரணத்துக்குப் பிறகு ஜாந்திபி என்ன ஆனாள்? எப்படி வாழ்ந்தாள்? பிள்ளைகளை எப்படி வளர்த்தாள்… என்கிற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

மோசமான மனைவிகள் ஒருபுறம் என்றால், மறுபக்கம் தன் வாழ்க்கை யைக் கணவரின் வெற்றிக்காக அர்ப் பணித்துக்கொண்ட பெண்கள் பலரும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்கள்.

ஜென்னியின் ஆதவுரவுதான் காரல் மார்க்ஸை மாபெரும் சிந்தனையாளராக உருவாக்கியது. பார்வையற்ற போர் ஹெஸுக்குத் துணையாக இருந்தவர் அவரது தாய். வர்ஜீனியா வுல்ப் என்ற பெண் எழுத்தாளரின் கணவர் லியோனார்டு, தன் மனைவி எழுத்தாள ராகச் செயல்பட சகல விதங்களிலும் உறுதுணையாக இருந்தார்.

இவ்வளவு ஏன்… டால்ஸ்டாயின் மனைவி சோபியா, ஒவ்வோர் இரவும் கணவர் எழுதிப் போட்ட நாவலின் பக்கங்களை முதுகு ஒடியப் பிரதி எடுத்து உதவி செய்திருக்கிறார். இப்படி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட துணை கிடைத்த எழுத் தாளர்கள் பாக்கியவான்கள்.

அப்படியான ஒரு மனிதர் கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி.ராஜநாராயணன்! அவரது துணைவி யார் கணவதி, அற்புதமான பெண்மணி. அன்பிலும் உபசரிப்பிலும் அவருக்கு இணையே கிடையாது. கி.ராவின் எழுத்துப் பணிக்கும் குடும்ப வாழ்வுக் கும் அவரே அச்சாணி!

கணவதி அம்மாள்குறித்து ‘கி.ரா இணைநலம்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. எழுதிய வர் எஸ்.பி.சாந்தி. வெளியிட்டது ‘அகரம்’ பதிப்பகம். ஓர் எழுத்தாளரின் மனைவிகுறித்து, தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுதான் என நினைக்கிறேன். கணவதி அம்மாளின் நினைவுகளை வாசிக்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.

கி.ரா பிறந்த இடைசெவல் கிராமம்தான் கணவதி அம்மாளின் ஊரும். ஜில்லா போர்டு தொடக்கப் பள்ளியில் படித்த தனது பள்ளி நாட்கள் பற்றியும், உடன் படித்த தோழிகள் குறித்தும் நினைவுகூரும் கணவதி அம்மாள், பொதுவாக ‘திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தன்னோடு படித்த பெண் தோழிகளை, விருப்பமான மனிதர்களைப் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். பிள்ளை பெற்றதோடு அவளது சகல தனித் தன்மைகளும் புதையுண்டுப் போய் விடுகின்றன’ என ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

காசநோயாளியாக இருந்த கி.ராவை நம்பிக்கையுடன் தைரிய மாக தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதையும், தங்களுடைய கல்யாணத்துக்கு போட்டோ கிடையாது, மேளதாளம் கிடையாது, சடங்குகள் எதுவும் கிடையாது, விருந்து சாப்பாடு கூட கிடையாது. முகூர்த்தப் பட்டுப் புடவைகூட நூல் புடவைதான். கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு 200 ரூபாய் மட்டுமே என நினைவுகூர்கிறார்.

விவசாயப் பணிகளுக்கு ஓடியோடி உதவிகள் செய்தது, நோயாளியான கணவரைக் கவனித்துக்கொண்டது, பிள்ளைகளை நோய் நொடியில் இருந்து காத்து வளர்க்கப் பாடுபட்டது, வீடு தேடிவரும் இலக்கியவாதிகளுக்கு விருந்து உபசாரம் செய்தது,

விவசாயச் சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு கி.ரா சிறைப்பட்டபோது ஒற்றை ஆளாக குடும்பத்தை கவனித்துக்கொண்டது… என நீளும் கணவதி அம்மா ளின் பல்வேறு நினைவுகளின் ஊடாக, ஒரு பெண்ணின் அர்ப்பணிப்புமிக்க மனதும் போராட்டமான வாழ்க்கையும் வெளிப்படுகிறது.

‘ஆனந்த விகடன்’ இதழில் முத்திரை கதை எழுதி கிடைத்த 100 ரூபாயில், கி.ரா தனக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவை எடுத்து தந்தது, எங்கே சென்றாலும் தன்னை உடன் அழைத்துப் போனது, ஹிந்தி படங்களுக்குக் கூட தன்னை அழைத்துப் போனது,

கடிந்து பேசாமல், முகம் சுளித்துத் திட்டாமல், தன்னை கவுரவமாக, மரியாதையாக நடத்தியது. திருமணமானது முதல் இன்று வரை தனது விருப்பங்களை மதித்து நடந்துகொள்ளும் அன்பான கணவராக கி.ரா திகழ்வதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் கணவதி அம்மாள்.

தண்ணீர் மாதிரி தன் வழித் தடமெங்கும் ஈரப்படுத்திக்கொண்டு, புல்முளைக்கச் செய்யும் காதலே உயர்வானது. அத்தகைய ஓர் ஆதர்ச தம்பதி என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள சாந்தி.

எழுத்தையும் எழுத்தாளனையும் கொண்டாடும் நாம், அந்த எழுத்தாள னுக்குத் துணை நிற்கும் குடும்பத் தினரையும் நன்றியோடு நினைவு கொள்ள வேண்டும். அதுவே சிறந்த பண்பாடு!

- வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x