

சூத்திரக் கயிறுகளில் ஆடுகின்ற பொம்மைப் பாத்திரங்களல்ல; டால்ஸ்டாயின் பாத்திரங்கள். வாழ்க்கையில் காணப்படுகின்ற, ஆசாபாசங்கள் நிரம்பி மக்களை அப்படியே இங்கே காண்கிறோம். அவற்றோடு அழுகிறோம். புலம்புகிறோம், சிரிக்கிறோம். நிதம் பழகுகின்ற மனிதர்களே பாத்திரங்களாகக் காட்சி அளிக்கின்றனர். ஏதோ புத்தகம் படிக்கின்ற உணர்ச்சி வரவில்லை. அந்நாடகத்தில் நாமும் சேர்ந்து நடிக்கிறோம். அன்னாவின் அழகிய தோள்கள், அடர்ந்த அவளது தலைமயிர், வனப்பு வாய்ந்த அவளது ஒளி வீசும் வதனம், பாதி மூடின கண்கள் - எல்லாமும் நம்முள் நின்றுவிடுகின்றன. ரயில் சக்கரங்களின் அடியில் அவளது மற்ற அவயங்கள் நசுங்கிக் கிடக்கின்றன. அவள் முகம் மாறவில்லை. புத்தகத்தைப் படித்து மூடினால் அவள் வதனம் நம்முன் சுடர்விட்டு உலாவும்.
(1947-ல் தமிழ்ச்சுடர் நிலையம் வெளியிட்ட 'அன்னா கரீனினா' மொழிபெயர்ப்புக்குத் தமிழறிஞர் இரா. தேசிகன் எழுதிய முகவுரையிலிருந்து ஒருபகுதி)