Published : 21 Dec 2014 11:15 AM
Last Updated : 21 Dec 2014 11:15 AM

இடிபாடுகளுக்கிடையில் எனது கவிதை: ஞானக்கூத்தன் நேர்காணல்

எள்ளல் மற்றும் சிரிப்பைத் தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தந்தவர் கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். ‘விஷ்ணுபுரம்’ விருது அறிவிப்பை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது…

‘பென்சில் படங்கள்’ கவிதை நூலில் உங்களது இளம்பிராயத்துச் சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன…

ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில் எதிர் பாலினம், குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய அறிவு ஏற்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையும் எப்படிக் கட்டுப்படுத்தி, சமரசம் செய்து ஒரு ஒழுங்கை நிலைநிறுத்தப் பார்க்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறான்.

உங்கள் கவிதைகள் மரபின் ஓசையைத் துறக்காமல் இருக்கக் காரணம் என்ன?

நான் ஒரு கோவிலுக்குப் பக்கத்தில் பிறந்து வளர்ந்தேன். அது வைஷ்ணவக் கோவில். அதற்குப் பக்கத்தில் சைவக் கோவில். அர்த்தம் விளங்குவதற்கு முன்பே பாசுரங்கள், பிரபந்தங்கள், பதிகங்கள் அறிமுகமாகிவிட்டன. அவைதான் என்னைக் கவிதையை நோக்கித் தூண்டின.

புதுக்கவிதை நிலைபெற்ற கதையைச் சொல்லுங்கள்…

பாரதிதாசனுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் இருந்த வேளை அது. அதற்குக் காரணம் பாடுபொருள் இல்லாமைதான். அது ஏற்கனவே நிர்ணயமாக இருந்தது. ஒன்று கட்சியைப் பற்றி அல்லது பொதுவுடைமைக் கொள்கைகளைப் பற்றி எழுத வேண்டும். இல்லையெனில் தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துக் கவிதை எழுத வேண்டும். அப்போது கவிதைகள் கல்கி, கலைமகளில் பண்டிகை நாட்களில் மட்டுமே பிரசுரிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் புதிய கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று க.நா.சு.

‘சரஸ்வதி’யில் எழுதினார். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்றார். உரைநடையில் எழுதினால் தமிழைப் புலவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து விட முடியும் என்ற கருத்தை க.நா.சு.வோடு சேர்ந்து பிச்சமூர்த்தியும் வைத்தார். பத்து பேரோ, நூறு பேரோ படித்தால் போதும் என்ற நிலையில்தான் ‘எழுத்து’ இதழில் புதுக்கவிதை இயக்கம் தொடங்கியது.

‘நடை’யில் எழுதியபோது, உங்கள் கவிதைகள் புதுக்கவிதை இல்லை என்று விமர்சனம் எழுந்ததே?

மரபைப் புதுப்பிக்கிறேன், மரபை விடவில்லை என்று சொன்னார்கள். நகுலன் என்னைப் புதுக்கவிஞன் இல்லை என்று சொன்னார். சி.மணியும் சொன்னார். க.நா.சு.வுக்கு எனது கவிதைகள் ஏற்புடையனவாக இருந்தன.

நண்பர்களுடன் சேர்ந்து ‘கசடதபற’வை ஏன் தொடங்கினீர்கள்?

அதில் தமிழை எங்கே நிறுத்தலாம் என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன். சந்தியில் நிறுத்தாமல் இருந்தால் போதும் என்று சுஜாதா எழுதினார். பெரிய பத்திரிகைகளில் இருந்து கவிதைகளை விடுவித்துச் சுதந்திரமாக எழுத விரும்பினோம். மொழி, நாடு, மதம்,மக்கள் என்று பேதம் பார்க்காமல் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கும் கவிதைகளை எழுத நினைத்தோம். நான், ஆத்மாநாம், ஆர்.ராஜ கோபாலன், ஆனந்த், தேவதச்சன் எல்லாரும் சேர்ந்து ஒரு இயக்கமாக ஆனோம். புதுக்கவிஞர்களைத் தனிநபர் வாதிகள் என்று வானம்பாடிக் கவிஞர்கள் எங்களைத் திட்டத் தொடங்கினார்கள். இப்படிக் ‘கசடதபற’ வழியாக நவீன இலக்கியத்துக்கான கால்கோள் விழா நடந்தது.

புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கியபோது உங்களுக்கு என்ன வகையான எண்ணங்கள் இருந்தன?

பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய கவிதைகள் நமது கவிதைகளுக்கு உறுதுணையாக இருக்கப் போவதில்லை என்ற எண்ணம் தெளிவாக இருந்தது. பாரதியாரின் கவிதைகள் உயர்வானவை. ஆனால் யதார்த்த உலகம் அவரிடம் இல்லவே இல்லை. புதுக்கவிதை யதார்த்த உலகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். பாரதிதாசனிடம் இனரீதியான விருப்பு வெறுப்பு கருத்துகள் இருந்தன. நமது சமூகம் பல விதமாகப் பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினைகளை அதிகம் வலியுறுத்தாமல் ஒரு பொதுத் தன்மையைக் கவிதையில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இளம்பருவத்தில் தமிழரசுக் கழக ஆதரவாளராக இருந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்..

1952-ம் ஆண்டு எனக்கு 14 வயது. இலக்கணம் தெரியாமலே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அப்போதுதான் ம.பொ.சி. எங்கள் ஊருக்கு வந்தார். திராவிட இயக்கத்துக்கு எதிராகப் பேசினார். தமிழ்நாடு என்பது தனி, சுயநிர்ணயம் வேண்டும் என்றார். உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குத் தோள்கொடுப்போம் என்று பேசினார். அவர் பேச்சு என்னைக் கவர்ந்தது. தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று அவர் சொன்னது எனக்குப் பிற்பாடு திருப்திகரமான விளக்கமாக இருந்தது.

திராவிட அரசியல் தமிழ் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கங்களைக் கவிதைகளில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்களே…

திராவிட இயக்கத்தின் கருத்துகளை எதிர்த்து நான் எழுதியதேயில்லை. ஒரு பேச்சாளன் பேசுகிறான். அவன் திமுககாரனாக, காங்கிரஸ்காரனாக இருக்கலாம். அவன் பொதுமனிதனின் பார்வையில் எப்படிப் படுகிறான் என்பதே எனது கவிதையின் கவலை. திராவிட இயக்கங்களால் தமிழ் சமூகத்துக்கு எந்த நன்மையும் பெரிதாக விளையவில்லை என்பதே குடிமகனாக எனது கருத்து. அவர்களால் பண்பாடு போச்சு. மக்களிடத்தில் வேற்றுமை பெருகியது. திராவிட அரசியல் கூட்டங்களில் பொழுதுபோக்கு மதிப்பைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. இட ஒதுக்கீடு போன்ற கொள்கைகளில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடைமுறைப்படுத்தியிருக்கும்.

நவீன வாழ்வை உங்கள் கவிதைகள் குறைபாடுள்ளதாக, அபத்தமாகப் பார்க்கிறதா?

பல நூற்றாண்டுகளாக ஒரு பண்பாடு காக்கப்பட்டு வந்தது. ஆரியர்கள் ஆதிக்கம், இஸ்லாமியப் படையெடுப்பு, தலித்களின் அடிமை நிலை, பெண் அடிமைப் போக்கு என நாம் இன்று பேசும் எல்லாமே ஒரு நெடிய கால வரலாற்றை முன்னிறுத்திப் பேசுபவை. ஆனால் ஒரு முழு வாழ்க்கை உடைந்துபோய்விட்டது. தொட்டால் பால் திரிவது மாதிரி எல்லாமே இடிந்துபோய்விட்டது. எனது கவிதைகள் இடிந்ததை, உடைந்ததைப் பேசுகின்றன. கீழ்வெண்மணியில் கொளுத்தப்

பட்டதைப் பேசுகிறேன். மனிதன் பசியோடு இருக்கிறான். ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனிதன் அனுபவிக்கும் கஷ்டத்துக்கு முன்வினைப் பயன் என்ற நம்பிக்கையாவது இருந்தது. அதையும் அவனிடம் இருந்து பறித்துவிட்டோம். உனது துயரத்துக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டோம். அப்போது இயற்கையாகவே மோதல் உருவாகி விடுகிறது.

மக்கள் போராடக் கூடாது என்கிறீர்களா?

எதுக்கெடுத்தாலும் இன்று போராடுகிறோம். போராடினால் ஒரு வீரியம் வருகிறது. சேகுவேரா பனியனைப் போட்டுக்கொண்டால் நமக்கு ஒரு சந்தோஷம். ஆனால் அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதாகத் தெரியவில்லை. அதைத்தான் விடுபட்ட நரிகள் கவிதையில் எழுதினேன். நிறைய மனிதர்கள் விடுபட்டுப் போய்விடுகிறார்கள். இடிபட்ட கோயிலின் கடவுளே என்று தாகூர் சொல்வார். கவிதையும் இடிந்து போய்விட்டது. இடிபாட்டுக்கிடையில் இருப்பதுதான் எனது கவிதை என்று நினைக்கிறேன்.

இன்றைய சமூகத்தில் புதுக்கவிதைக்கான இடம் எது?

கவிதைக்கான இடம் இருக்கிறது. ஆனால் எங்கே? இன்னும் கவிதை அபாயகரமான இடத்தில்தான் உள்ளது. புதுக்கவிதை, படிப்பவர்களின் மனதை மாற்றுகிறது. மௌனி, ந.முத்துசாமி, கோணங்கி, தமிழவன், பா.வெங்கடேசன், ஜெயமோகன் போன்றவர்களின் உரைநடையில் புதுக்கவிதையின் பாதிப்பைப் பார்க்கலாம். புதிதாகச் சொல்வது, வித்தியாசமாகச் சொல்வது என்பதைப் புதுக்கவிதைதான் சவாலாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இன்றைய புதுக்கவிதையில் உள்ள இடைவெளிகள் பற்றி…

கவிதைகளில் சமயம் போய்விட்டது. உலகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவு பற்றிய பார்வை இல்லை. எனது குவளையை நீங்கள் எடுத்துச் சென்றுவிடலாம். எனது கையை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் எனது குவளையை நீங்கள் உடைத்தால் எனது கையை உடைப்பது போல கத்துகிறேன். ஏன்? சமயம் என்பது கடவுளை வழிபடுவதைச் சொல்லவில்லை. தத்துவ விசாரங்கள் போய்விட்டன. கடவுள் வழிபாட்டை எதிர்த்தவுடன் தத்துவத்தையும் விட்டுவிட்டார்கள். ஆனால் அது தேவை.

உலகக் கவிதைகள் அடிப்படையில் இன்றைய தமிழ்ப் புதுக்கவிதை எப்படியாக இருக்கிறது…

மற்ற நாடுகளின் நல்ல கவிஞர்களோடு ஒப்பிட்டால் இங்கே பத்துப், பதினைந்து பேரைச் சொல்ல முடியும். யூமா வாசுகி, யவனிகா ராம், தேவேந்திர பூபதி, அய்யப்ப மாதவன், மாலதி மைத்ரி, பெருந்தேவி போன்றவர்கள். யவனிகா மற்றும் தேவேந்திர பூபதியிடம் இன்றைய கவிதைக்கான முன்வடிவம் கிடைக்கிறது. விகடன் போன்ற பத்திரிகைகளிலும் நல்ல கவிதைகள் கிடைக்கின்றன.

- தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

புடைப்படம்:புதுவை இளவேனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x