Last Updated : 28 Dec, 2014 12:10 PM

 

Published : 28 Dec 2014 12:10 PM
Last Updated : 28 Dec 2014 12:10 PM

அறியப்படாத இலக்கிய முகம்

இதே டிசம்பர் மாதத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 1968-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை விளைவித்தது. ஞானக்கூத்தன், இன்குலாப், இந்திரா பார்த்தசாரதி, சோலை சுந்தரபெருமாள் உள்ளிட்ட பலரும் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சமூகக் கொடுமையைத் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.

ஆனால் அதற்கு ஆறாண்டுகளுக்கு முன்பு 1962-ல் இதே போன்ற ஓர் அடக்குமுறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் ‘சூத்திரதாரி’ என்னும் ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. ஆர். என். கண்ணன் என்பவர் அந்தக் கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு. வெளிவந்தவுடனே பரவலாக வாசிக்கப்பட்டு கவனமும் பெற்றது. அந்த எழுத்தாளருக்கு அதுதான் முதல் கதை. அதற்கு முன்பு கட்டுரைகள் எழுதியுள்ளார். முதல் கதைதான் என்றாலும் கதையின் விவரிப்பு கூர்மையானதாக இருந்தது. உண்மை ஒளியும் பொருந்தியிருந்தது. வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்தும் தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’, பூமணியின் ‘வெக்கை’ போன்ற நாவலை எழுதியிருக்க வேண்டிய அந்த எழுத்தாளர் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு கதையே எழுதவில்லை. அதுவே அவரது முதலும் கடைசியுமான கதையாகிவிட்டது. ஆனால் அவர் தன் வாழ்க்கையைப் பக்கங்களுக்குள் அடக்கவியலாத அனுபவங்களால் ஆனதாக மாற்றிக்கொண்டார். 72 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பொது வாழ்க்கையே இன்றைய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணம். தோழர் ஆர்.என்.கே. என அழைக்கப்படும் மதிப்புமிக்க தலைவர் நல்லகண்ணுதான் அந்த எழுத்தாளர்.

முதலாளிகளின் அடக்குமுறை

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம்தான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அந்த இயக்கமோ பெரும்பாலும் பண்ணையார்களையே நம்பியிருந்தது. சுதந்திர இந்தியாவிற்குத் தேர்தல் வந்தபோது வேட்பாளர்கள் பலரும் பண்ணையார்களே. இல்லையெனில் பண்ணையார்களின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் அதே ஆண்டான், அடிமை முறைதான். இந்தச் சூழலில்தான் ‘ஆகாவென்று எழுந்தது யுகப் புரட்சி’. தோழர்கள் பலர் கிராமம் கிராமமாகச் சென்று முதலாளிகளின் அடக்குமுறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். தோழர் நல்லகண்ணு அவர்களுள் ஒருவர்.

கவிதையின் மீது ஈடுபாடு

அந்தக் காலகட்டத்திய நல்லகண்ணுவின் அனுபவம்தான் ‘சூத்திரதாரி’ கதையாக வெளிப்பட்டிருக்கிறது எனலாம். நல்லகண்ணு கவிதையின் மீது ஈடுபாடு கொண்டவர். சுப்ரமண்ய பாரதியும், சுத்தானந்த பாரதியும் இவரது ஆதர்ச கவிகள். கவிதைகளும் எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்துள்ளார். ஆனால் கதைக்கு மிக எளிமையான வட்டார வழக்கு மொழியே அவர் தெரிவு. அந்தக் காலகட்டத்திய ரொமண்டிஸிசமும் இவரது கதையில் இல்லை. கதைச் சூழல் குறித்த தேவையில்லாத அழகியல் விவரிப்புகள் இல்லை. இந்த அம்சம், கருத்தைச் சிதைக் காமல் கதைக்குப் பலமாகிறது.

சுதந்திர இந்தியாவின் சிறு கிராமத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்தான் கதையின் மையம். பண்ணையார்கள் அந்தக் காலத்தில் தனி அரசாங்கங்களாக இருந்தனர் என்பதைக் கதை தொடக்கத்திலேயே சித்திரித்துவிடுகிறது. அவர்களின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்கிறது கதையின் ஒரு வரி. பண்ணையார்களின் தயவில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஆதாரமாகிறது. பண்ணையார்கள் கை நீட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்துள்ளனர் என்பதும் புலனாகிறது. ஏனெனில் தனக்குப் பணியாத மக்களைக் காவல்துறையை ஏவித் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு இருந்துள்ளது.

முனியனின் குடிசை

கைலாசபுரம் என்னும் கிராமத்தை கீழச்சேர்ப் பண்ணை, மேலச்சேர்ப் பண்ணை ஆகிய இரு பண்ணையார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் குமாரசாமியா பிள்ளை பண்ணையார்களின் ஆதரவை நாடி வருகிறார். போட்டியிடுபவர் சொந்தக்காரர். கட்சியும் வேண்டப்பட்ட கட்சி என்பதால் ஆதரிக்கிறார்கள். அந்த ஊரின் பெரும்பான்மை ஜாதி வாக்கை நம்பி அவர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து தன் கட்சிக்கான அறுவடையைச் செய்ய மற்றொரு புதிய கட்சி முயல்கிறது. இதற்கிடையில் தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்குகிறது.

பண்ணைகளைக் கடந்து செல்லும் கம்யூனிஸ்ட் தோழர்களின் சைக்கிள் பேரணி பண்ணையார்களை நடுநடுங்கச் செய்கிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து தெறிக்கும் அவர்களது முழக்கங்கள் பண்ணையார்களின் செவிநரம்பை அதிரச்செய்கின்றன. பேரணியின் முன்னின்று செல்லும் முனியன் என்ற ஒரு தலித்தை நோக்கிப் பண்ணையார்களின் தடித்த கன்னங்கள் சிவக்கின்றன. அதுவரை ‘பெளவியமாக’ இருந்த தலித்துகளுக்கு கம்யூனிச இயக்கம் தந்த தைரியம் பண்ணையார்களால் சகிக்க முடியாததாக இருக்கிறது. இறுதியில் முனியனின் வீடு தீப்பற்றி எரிகிறது.

நாட்டார் பாடல்களில் ஈடுபாடு

நல்லகண்ணு சிறையில் இருந்த கால கட்டத்தில் வாசிப்பு, எழுத்து எனத் தீவிரமாக இயங்கியுள்ளார். நாட்டார் பாடல்கள் மீது அவருக்கு உள்ள நாட்டத்தை அந்தக் காலகட்டத்திய அவரது கட்டுரைகளின் வழியே அறிய முடிகிறது. கசப்புக் கவிஞர் என அழைக்கப்பட்ட ஆண்டான் கவிராயன் குறித்து எழுதியுள்ளார். இந்தக் கவிஞர் குறித்த பதிவை உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ நூலில் பார்க்க முடிகிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் புனைப்பெயர்களில் ஒன்று ‘ஆண்டான் கவிராயன்’. சமுதாய அநீதிகளைச் சபித்துப் பாட இந்தப் புனைப்பெயரை கவிமணி சூட்டிக்கொண்டுள்ளார். ஆண்டான் கவிராயனின் தனிப் பாடல் திரட்டுகளிலிருந்து பல பாடல்களை நல்லகண்ணு மேற்கோள் காட்டுகிறார். 1950-ல்தான் ஆண்டான் கவிராயன் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றன. அதை வாசித்துப் பதிவுசெய்ததில் நல்லகண்ணுவின் நுட்பமான வாசிப்பு நமக்குப் புலனாகிறது. சாதி, மத பேதமின்றி உயரும் ஆண்டான் கவிராயனின் சாடல்களைப் பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொள்கிறார் நல்லகண்ணு.

பாடல்கள் மூலம் கடந்த சிறைக்கொடுமை

கொண்டாட்டத்திற்கான, தேம்பலுக்கான வடிவமாகப் பாடல்கள் இருக்கின்றன. சிறைகளின் தனிமையை, கொடுமைகளை கைதிகள் பாடல்கள் மூலம்தான் கடந்திருக்கிறார்கள். அவற்றைச் சிறைப் பாடல்கள் எனத் தனியாகப் பட்டியலிடுகிறார் நல்லகண்ணு. அந்தக் காலத்தில் சிறை அதிகாரிகளை ‘சார்’ என விளிப்பது மரியாதைக் குறைவாகப் பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளை விளிப்பதுபோல் ‘துரை’ என்றே விளிக்க வேண்டும். இதை மீறும் கைதிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. “...தீஞ்ச ரொட்டிக்கும்/கையேந்தி நிற்கும் பரிதாபம்/பார்/ சார்... சார்... என்று சொன்னால் ஷட் அப்” என்னும் சிறைப்பாடலை வேடிக்கையாக மேற்கோள் காட்டுகிறார்.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நா. வானமாமலை தொடர்பால் இவருக்கு நாட்டார் பாடல்கள் மீதான ஆர்வம் மிகுந்திருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. நா.வா. குறித்தும் நல்லகண்ணு எழுதியிருக்கிறார். திரு.வி.க., தமிழ்ஒளி, தொ.மு.சி. ஆகியோர் குறித்தும் மரியாதையுடன் பதிவுசெய்துள்ளார். பாரதி குறித்த அவரது கட்டுரைகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

பாரதியைத் தேடி

காசியில் பாரதி வசித்த வீட்டைத் தேடி அலைந்த கதையைச் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்கிறார் நல்லகண்ணு. கங்கையின் ஓரத்திலிருந்த ஒரு வீட்டில் பாரதி வசித்துவந்துள்ளார். தன் மாமா மீதுள்ள பயம் கலந்த மரியாதையால் மாடி அறையில் பதுங்கிக்கொண்டிருந்த காட்சியைத் தன் எழுத்துகள் வழியாக நல்லகண்ணு நம் கண் முன்னே உருவாக்கிவிடுகிறார். பாரதிக்கும் அவரது தங்கைக்குமான நேசத்தை நல்லகண்ணு விவரிக்கும்போது பாரதியின் இன்னொரு பக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி பாரதியும் மார்க்ஸும் நல்லகண்ணுவின் ஆதர்ச புருஷர்களாக இருக்கிறார்கள் எனலாம். இப்போது இவருடைய அலுவலக மேஜையில் இவர்கள் இருவரது நிழற்படங்களை மட்டும் பார்க்க முடிகிறது. இந்த நிழற்படங்களில் இருக்கும் பாரதியும் மார்க்ஸும் இரு தனி நபர்கள் மட்டுமல்ல; 72 ஆண்டுக் காலப் பயணத்தின் மொழியும் அரசியலும்.

- மண்குதிரை, தொடர்புக்கு:jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x