Published : 01 Nov 2014 12:09 PM
Last Updated : 01 Nov 2014 12:09 PM

வசீகரிக்கும் வண்ணதாசன்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

சின்ன வயதிலிருந்தே வாசிப்பு எனக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. ஒரு புத்தகத்தை ஒரே நேரத்தில் படிக்கும் திறமை எனக்கு முன்பெல்லாம் இருந்ததில்லை. சமீப நாட்களாகத்தான் நல்ல நூல்களைத் தேடித்தேடிப் படிக்க வேண்டும் என்று முடிவுசெய்து, அதைச் செயல்படுத்திவருகிறேன். திரைப்படம் மட்டுமல்ல, கலையுலகில் இருப்பவர்கள் அனைவருக்கும் வாசிப்பு மிகவும் அவசியம் என்பதையும் உணர்கிறேன்.

எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றி கேள்விப்பட்டு, அவருடைய நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் துளிர்த்த நேரத்தில், கையில் கிடைத்த புத்தகம் ‘உயரப் பறத்தல்’ சிறுகதைத் தொகுப்பு. நம்மைச் சுற்றியுள்ள உறவுகளின் உன்னதத்தை நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார் வண்ணதாசன். சின்னச் சின்ன உறவுகளுக்குள்கூட இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா என்று வியந்தேன்.

வண்ணதாசன் எழுதிய அந்தத் தொகுப்பில் பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள் ஏராளம். கதைகளை வாசிக்க வாசிக்க, பெண்களின் வாழ்க்கையை, பெண்களின் உலகில் பார்வையாளனாக இல்லாமல், அவர்களுள் ஒருவராக என்னால் உணர முடிந்தது. எளிமையான கதை நகர்வில் அங்கங்கே உணர்ச்சிக் கொந் தளிப்புகள், எதார்த்தம், வலி எல்லாமும் படர்ந்திருக்கும். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் திரைப்பட வேலை களுக்கு இடையே வாசிப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளத் தூண்டுபவராக என்னை வசீகரித்திருக்கிறார், வண்ணதாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x