Last Updated : 19 Aug, 2017 09:41 AM

 

Published : 19 Aug 2017 09:41 AM
Last Updated : 19 Aug 2017 09:41 AM

அஞ்சலி: சிற்றிதழ்களின் காதலர் கிருஷ் ராமதாஸ்

சி

ற்றிதழ்களின் தீராக்காதலர் என அறியப்பட்ட கிருஷ் ராமதாஸ் கடந்த புதன் அன்று காலமானார். பணிநிமித்தமாக துபாயில் இருந்தாலும் ஃபேஸ்புக் வழியாகவே உலகத் தமிழர்களோடு நட்புறவை வளர்த்துக்கொண்டவர் கிருஷ் ராமதாஸ். தொடர்ந்து சிற்றிதழ் இயக்கங்களோடு இயங்கிவந்தவர்; இலக்கியம், சமூகம், அரசியல், மொழி என தமிழில் வெளிவந்த பல்வேறு இதழ்களைப் பெறுவதற்காகக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் சந்தா செலுத்தித் தனது ஆதரவைச் செயல்பூர்வமாக ஆற்றிவந்தவர் கிருஷ் ராமதாஸ் .

‘சிற்றிதழ்கள் உலகம்’ என்றொரு அச்சிதழையும் கிருஷ் ராமதாஸ் கொண்டுவந்தார். அதில் அவர் கவனப்படுத்த விரும்பிய இதழ்களின் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்களையும், அந்த இதழ்களில் வெளிவந்த முக்கியமான கட்டுரைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதிவந்தார். இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நண்பர்களிடமிருந்து சிற்றிதழ்களைப் பெற்று, அவற்றை ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்திவந்தார். பின்னர், அவற்றின் முழுவிவரங்களை, முடிந்தால் அவற்றைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ‘சிற்றிதழ்கள் உலக’த்தில் வெளியிட்டார்.

கடந்த ஜூன் 29 வரையில் கிருஷ் ராமதாஸின் பதிவுகளில் இதழ்கள் குறித்த தேடல் இருந்ததைக் காண முடிகிறது. கடைசியாக அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டது ஜூலை மாதத்துக்கான 'படச்சுருள்' இதழின் அட்டையை. அதன் பிறகு, உடல்நிலை சரியில்லை என்பதற்காக மருத்துவமனையில் தான் பெற்ற சிகிச்சை குறித்த பதிவை எழுதியிருந்தார். உடல்நலம் குன்றியுள்ள நிலையில் தான் திரும்பிவருவேன் என்றும், சிற்றிதழ் சார்ந்த பணிகள் நிறைய உள்ளன என்றும் தனது கடைசிப் பதிவில் கிருஷ் ராமதாஸ் எழுதியிருக்கிறார்.

துபாயில், மூளை அறுவை சிகிச்சை செய்துகொள்ள கிருஷ் ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, கடந்த ஒரு மாத காலம் கோமா நிலையில் இருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டார். பெரம்பலூருக்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்தில் 16.8.2017 அன்று காலை கிருஷ் ராமதாஸின் உயிர் பிரிந்தது.

அவரது ஈடுபாடும் அதுசார்ந்த தேடல்களும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பது அவர் இறந்த பிறகுதான் உணர முடிகிறது. ஒவ்வொரு காலத்திலும் சிற்றிதழ் சேகரிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இணையதளங்கள் வழியாகவே ஒரு கலாச்சாரப் பரிவர்த்தனையை உருவாக்கி எல்லோரிடமும் மிகமிக அன்பான தொனியில், பாரபட்சமற்ற தமிழ் வாசக சமுதாயத்தை வளர்த்தெடுக்க முயன்றது அவரது தனிச்சிறப்பு.

- பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x