Last Updated : 01 Nov, 2014 12:14 PM

 

Published : 01 Nov 2014 12:14 PM
Last Updated : 01 Nov 2014 12:14 PM

உலகின் பெரிய புத்தகச் சந்தை: சில குறிப்புகள்

உலகின் மிகப் பெரிய புத்தகச் சந்தையான பிராங்பர்ட் புத்தகச் சந்தைக்கு இந்த ஆண்டு 8-வது முறையாகச் சென்றிருந்தேன். 10-க்கும் மேற்பட்ட மாபெரும் அரங்குகளில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் பங்கேற்ற பல்லா யிரம் ஸ்டால்கள். தொழில்சார் பரிவர்த்தனைக்கான சந்தை இது. பங்கேற்பது பதிப்பாளர்கள் மட்டுமல்ல; முக்கிய ஊடகங்கள், அச்சகத்தார், பதிப்புத் துறைசார் மென்பொருள் விற்பன்னர்கள், இலக்கிய முகவர்கள், நூலகர்கள், விநியோகஸ்தர்கள், புத்தகக் கடைகள் நடத்துவோர், முன்தகவல் சேகரிப்போர், நாட்காட்டிப் பதிப்பாளர்கள், கதைகளைத் தேடி வரும் திரைப்படத் துறையினர், வலைஞர்கள், படைப்பாளிகள் என்று புத்தகத் தொழிலாளர்கள் அனைவரும் வருகின்றனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் புதன் தொடங்கி ஞாயிறு முடிவடையும் சந்தை இது. புதன், வியாழன், வெள்ளி முழுவதும் தொழில்சார் சந்திப்புகள். சனிக்கிழமை பல புதிய ஆர்வலர்களுடன் சந்திப்புகள் நிகழும் நாள். அரங்குகள் பரபரப்பாக இருக்கும். ஞாயிறு வாசகர் திருநாள். புத்தகச் சந்தை இறுக்கம் நீங்கிக் கலகலப்பாகும். காட்சிப்படுத்தக் கொண்டுவந்த நூல்களையும் பிற சாதனங்களையும் விரும்பினால் அன்று ஒரு நாள் மட்டும் விற்கலாம். குழந்தை நூல்களின் நாயகர்களாக வேடமிட்டுப் பலரும் திரிவார்கள். கோமாளிக் கூத்துகள் பலதும் நடக்கும்.அன்று மாலை அரங்கை மூட்டைகட்டிக்கொண்டு நாங்களும் வெளியேறுவோம்.

நாட்காட்டிகளுக்கான அரங்குகள்

எட்டு ஆண்டுகளாகப் பார்வையிட்ட பிறகும் இன்னும் அந்தக் கண்காட்சியை முழுவதுமாக அறிந்த உணர்வில்லை. படித்தது வரை அடையாளப் படுத்த நூலில் சொருகும் ‘புக் மார்க்’ இருக்கிறதே, அதற்காகவே அமைக்கப்பட்ட ஒரு சிறு அரங்கு இருப்பது இம்முறை கண்ணில் பட்டது. இந்த ஆண்டு என் கவனத்தை ஈர்த்தது நாட்காட்டிகள் காட்சியகம். உலகெங்குமிருந்து சுமார் 350 நாட்காட்டிப் பதிப் பாளர்கள் 1,000-த்துக்கும் மேற்பட்ட நாட்காட்டிகளைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். சிவகாசியிலிருந்து எவரையும் காணவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய நாட்டு/மொழி பதிப்பாளர்களைத் தொடர்புகொண்டு சந்திக்கிறேன். இந்த ஆண்டு ஆர்மேனிய முகவர் ஒருவரைப் பார்த் தேன். 1915-ம் ஆண்டு நடந்த ஆர்மேனியப் படுகொலை யின் (10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டார்கள்) நூற்றாண்டை முன்னிட்டு அது பற்றிய படைப்பொன்றைத் தமிழில் மொழிபெயர்க்க லாமா என்ற நோக்கில் சந்திப்பு நடந்தது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 சந்திப்புகள்.

எறும்பூரக் கல் தேய்ந்த கதை

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பதிப்பாளர்கள் கவனத்துக்காக நான் ஒரு சிறுநூலைச் செப்பமாகத் தயாரித்து எடுத்துச் செல்வது வழக்கம். தேர்ந்தெடுத்த தமிழ்ப் படைப்புகளுக்கான அந்த ஆங்கில நூல் அடைவில், நம்முடைய மொழியையும் படைப்பாளி களையும் பற்றிய அறிமுகம் இருக்கும். புத்தகச் சந்தை சந்திப்புகளில் நம் படைப்பாளர்களின், படைப்புகளின் சிறப்புகளைச் சொல்லி பிறமொழிப் பதிப்பாளர்களை மொழிபெயர்க்கத் தூண்ட வேண்டும். நாம் உயர்வாக மதிக்கும் படைப்பாளிகளை அவர்கள் கவனிக்க வேண்டும் என்றால், அதற்குத் தமிழ் விற்பனையில், உயர் விருதுகளில், சிறந்த விமர்சனங்களில் ஆதாரம் காட்ட வேண்டும். மேலும், “தமிழ்ச் சமூகமே மதிக்காத படைப்பாளிகளைப் பிறர் ஏன் பொருட்படுத்த வேண்டும்; புதுமைப்பித்தன் தமிழ் இலக்கியத் தலைமகன் எனில், பல கோடித் தமிழர்கள் வாழும் சமூகத்தில் ஏன் இன்னும் அவர் சிறுகதைகள் 10 லட்சம் பிரதிகள்கூட விற்கவில்லை?” என்பன போன்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பதிப்பாளர்கள் கவனத்துக்காக நான் ஒரு சிறுநூலைச் செப்பமாகத் தயாரித்து எடுத்துச் செல்வது வழக்கம். தேர்ந்தெடுத்த தமிழ்ப் படைப்புகளுக்கான அந்த ஆங்கில நூல் அடைவில், நம்முடைய மொழியையும் படைப்பாளி களையும் பற்றிய அறிமுகம் இருக்கும். புத்தகச் சந்தை சந்திப்புகளில் நம் படைப்பாளர்களின், படைப்புகளின் சிறப்புகளைச் சொல்லி பிறமொழிப் பதிப்பாளர்களை மொழிபெயர்க்கத் தூண்ட வேண்டும். நாம் உயர்வாக மதிக்கும் படைப்பாளிகளை அவர்கள் கவனிக்க வேண்டும் என்றால், அதற்குத் தமிழ் விற்பனையில், உயர் விருதுகளில், சிறந்த விமர்சனங்களில் ஆதாரம் காட்ட வேண்டும். மேலும், “தமிழ்ச் சமூகமே மதிக்காத படைப்பாளிகளைப் பிறர் ஏன் பொருட்படுத்த வேண்டும்; புதுமைப்பித்தன் தமிழ் இலக்கியத் தலைமகன் எனில், பல கோடித் தமிழர்கள் வாழும் சமூகத்தில் ஏன் இன்னும் அவர் சிறுகதைகள் 10 லட்சம் பிரதிகள்கூட விற்கவில்லை?” என்பன போன்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்.

எறும்பூரக் கல் தேய்ந்த கதையாக இதுவரை அம்பை, சல்மா ஆகியோரின் படைப்புகள், பிரஞ்சு, ஜெர்மன் (டொச்), கலீசியன் மொழிகளுக்குச் சென்றுள்ளன. பெருமாள் முருகன், சோ. தர்மன், பி.ஏ. கிருஷ்ணன், அசோகமித்திரன், ஜி. நாகராஜன் போன்ற பலரது படைப்புகளை நம்பிக்கையுடன் பல்மொழிப் பதிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். பார்க்கலாம்.

இந்தியாவின் பங்கேற்பு

பிராங்பர்ட் புத்தகக் காட்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டை/மொழியை சிறப்புக் கவனத்துக்குத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தியா இரண்டு ஆண்டுகள் தேர்வானது. கடைசியாக 2006-ல். பின்விளைவுகளைப் பார்க்கும்போது அந்த வாய்ப்பு கள் அதிகமும் தவற விடப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது. சிறப்புக் கவனம் பெறும் நாட்டு/மொழியின் நூல்கள் பெருமளவுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு, அயல் நாடுகளில் பிரசுரம் பெறுகின்றன. இதற்கு உகந்த ஆதரவை அரசுகள் வழங்கு கின்றன. இந்தியா இருமுறை சிறப்புக் கவனம் பெற்றாலும் இந்திய மொழிப் படைப்புகள் பரவலாக மொழிபெயர்க்கப்படவில்லை. அடுத்த ஆண்டு இந்தோனேசியா. தமது தயாரிப்புகளை இந்த ஆண்டே அவர்கள் மிகச் சிறப்பாகத் தொடங்கிவிட்டார்கள்.

பிராங்பர்ட் புத்தகக் காட்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டை/மொழியை சிறப்புக் கவனத்துக்குத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தியா இரண்டு ஆண்டுகள் தேர்வானது. கடைசியாக 2006-ல். பின்விளைவுகளைப் பார்க்கும்போது அந்த வாய்ப்பு கள் அதிகமும் தவற விடப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது. சிறப்புக் கவனம் பெறும் நாட்டு/மொழியின் நூல்கள் பெருமளவுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு, அயல் நாடுகளில் பிரசுரம் பெறுகின்றன. இதற்கு உகந்த ஆதரவை அரசுகள் வழங்கு கின்றன. இந்தியா இருமுறை சிறப்புக் கவனம் பெற்றாலும் இந்திய மொழிப் படைப்புகள் பரவலாக மொழிபெயர்க்கப்படவில்லை. அடுத்த ஆண்டு இந்தோனேசியா. தமது தயாரிப்புகளை இந்த ஆண்டே அவர்கள் மிகச் சிறப்பாகத் தொடங்கிவிட்டார்கள்.

சந்தையில் எங்களுக்கு மேல் மாடியில் என்.பி.டி-யும் சாகித்ய அகாடமியும் இணைந்து அரங்கு அமைத்திருந்தார்கள். அங்கு ஒரு நிகழ்வு. இந்தியில் ஒரு எழுத்தாளர் பேசிக்கொண்டிருந்தார்.

ஒருவர் பேசும்போது, முன்னால் 10 முகங்களாவது வேண்டாமா? அவருடன் வந்திருந்த சக எழுத்தாளர்கள், அரங்கப் பணியாளர்களைச் சமத்காரமாகப் பார்வை யாளர்களாக அமர்த்தியிருந்தார்கள்.

பார்வையாளர் வரிசையில் அவர்கள் இடையில் ஒரு ஜெர்மனிய முகம் கண்ணில் பட்டது. இந்திய நூல்களின் மொழிபெயர்ப்புகளை மட்டும் ஜெர்மனியில் வெளியிடும் திரௌபதி பதிப்பகத்தார் அவர். இந்தி தெரியுமா என்று கேட்டேன். சிரித்தார்.

- கண்ணன்,
பிராங்பர்ட் புத்தகச் சந்தையில் தமிழிலிருந்து தொடர்ந்து பங்கேற்கும் ‘காலச்சுவடு’ பதிப்பக உரிமையாளர். தொடர்புக்கு: kannan31@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x