Last Updated : 05 Feb, 2017 12:08 PM

 

Published : 05 Feb 2017 12:08 PM
Last Updated : 05 Feb 2017 12:08 PM

உப்புக் கடலைக் குடித்த பூனை

கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார். கொங்கு மண்டலத்தின் ஒரு ஜமீன்தாரை நினைவுபடுத்தும் பெயர். ஆனால், இந்தப் பிம்பத்துக்கு முற்றிலும் நேரெதிரான திசையில் பய ணித்த எழுத்தாளன் சிவா.

அடிப்படையில் சிவகுமாரின் வாழ்வு மண்ணும் நீரும் சார்ந்த விவசாய வாழ்வுதான். செடி முருங்கை காய்த்துத் தொங்கும் கன்னிவாடி நிலப்பரப்பைவிட்டு நெட்டித் தள்ளிய வாழ்வை எதிர்கொள்ள, அவன் தள்ளு வண்டியில் ஜவுளித்துணிகளைப் போட்டு தெருத்தெருவாய் சுற்றி அலைந்தவன். ஒரு வகையில் அவனுக்குப் பிடித்தமானதொரு ஜீவிதத் தொடக்கமும் அதுதான்.

இந்தியா டுடேவில் ‘காற்றாடை’ கதைக்குக் கிடைத்த 5 ஆயிரம் ரூபாய் சன்மானத்துக்குப் பின்னே, எழுதி மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என்ற பொய் பிம்பத்தை அவன் கன்னிவாடியில் இருந்துகொண்டு நம்ப ஆரம்பித்தான்.

சிவாவின் எல்லாக் கதைளுமே அவனின் நினைவுகளின் சிந்தல்களே. எல்லா வற்றையும் தன் வாழ்விலிருந்தும் அனுபவங்க ளிலிருந்துமே கதைகளாக்கியவன்.

சம்சாரிகளின் வலிகளை எல்லோரும் எழுதிக்கொண்டிருந்தபோது, சிவா மட்டும் அவர்களின் ஆழ்மனதில் ததும்பிக் கொண்டிருந்த அபிலாஷைகள், சிற்றின்ப வேட்கைகள் போன்றவற்றைக் கண்டு பிடித்தான். திருவிழாக்களிலும் மனிதக் கூடுகைகளிலும் நிகழும் கேளிக்கைகள், சீட்டாட்டம், கரகாட்டகாரிகளின் கடக்க முடியாத புன்னகை, இவற்றை அவன் எழுத்துகள் கண்டுபிடித்து சுவீகரித்தன.

வலி கொண்ட வாழ்வு சிவாவுடையது. போதிய கல்வி இல்லாமை, தொடர்ந்து வேலைகளிலிருந்து வெளியேறுவது, வீடு தங்காமை, அவமானங்களை வெகுமதிகளைப் போல வாங்கி வருதல், இதனூடே எழுதுதல் என சிவாவின் நாட்களை என்னால் மதிப்பிட முடியும். தாங்க முடியாத அந்த வலியையும், தாங்கிக்கொண்ட தொடர் அவமானங்களையும் தன் மொழியின் மீது மேற்பூச்சாகத் தடவி வைத்திருந்த நகைச்சுவையால் கடந்தான்.

‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ ஒரு கதை மட்டுமே போதும் க.சீ. சிவகுமார் என்ற அசல் கலைஞனை நாம் அடையாளப் படுத்த அல்லது அவனைத் தவறவிட்ட குற்ற உணர்வுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள.

ஏக்கம் தரும் கதைகள்

சம்பாதிப்பதற்கு வெளிநாட்டிற்குப் போயி ருக்கும் மனைவியில்லாத வீட்டில் தானும், மகளும், தனிமையை துடைத்தெறிய அங்கு மிங்கும் ஓடித் திரியும் ஒரு பூனை. இவற்றை வைத்து சிவா காவியத்தன்மையோடு ஒரு சிறுகதையைச் செதுக்கியிருப்பான். ஒவ்வொரு வரியும் ஒரு வாசகனை நகர விடாமல் நிறுத்தும். வெளிநாட்டுக்குப் போயி ருக்கும் அந்த மனைவி திரும்பி வந்துவிட மாட்டாளா என நம்மை ஏங்க வைக்கும்.

‘கன்னிவாடி’ என்ற தலைப்பில் தமிழினி கொண்டு வந்ததுதான் சிவகுமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அதைத் தொடர்ந்து ஆதிமங்கலத்து விஷேசங்கள், குணச்சித்திரங்கள், என்றும் நன்மைகள், நீல வானம் இல்லாத ஊரே இல்லை என எழுதிக் குவித்தான். அவன் புத்தகப் பக்கங்களை ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்களை, அசல் மனிதர்களைக் கொண்டு நிரப்பினான்.

யாருக்குமே இல்லாத சில பிரத்யேக குணாம்சங்கள் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தன. ஒரு வெள்ளைக்கார துரையின் பங்களாவைப் பார்த்துக்கொண்ட தோட்டக்காரரான தன் மாமனாரை அவன் நண்பர்களிடம் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ என்றே அறிமுகப்படுத்துவான். மாமனார் என்ற மனைவியின் அப்பா மீது தமிழ்ச் சமூகம் ஏற்றி வைத்திருக்கிற பிம்பத்தைக் கலைத்து வேடிக்கையாக்குவது, அதுதானே சிவா உன் எழுத்திலும் மிளிர்ந்தது. ஒரு தெரு நாயை க.சீ.சிவகுமார் அளவுக்கு அறிமுகப்படுத்திய எழுத்து தமி ழில் வேறில்லை.

‘‘ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் அச்சொற்றொடர் ஒன்று போதும் அக்கதைக்கு.

நகரம் சிதைத்த எழுத்து

சிவகுமார் மனித மனத்தின் ஏக்கங்களை, அலைவுறுதல்களை, நிராகரிப்புகளை பகடி மாதிரி சொல்லி நம்மை நெக்குருக்கினான். நரம்பு ஊசி போடுகையில் டாக்டர் குழந்தை வாயில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து சப்பு கொட்ட வைப்பது போல அது. ஆனால் போட்டு முடித்த அடுத்த கணம், வலி மெல்ல உடலெல்லாம் பரவுமே அப்படியான ஒன்று தான் சிவாவின் எழுத்து.

கன்னிவாடியில் மையம் கொண்டு அங்கி ருந்து பஸ் ஏறி திருவிழா பார்த்து, கரகாட்டக் காரிகளை வம்புக்கிழுத்து, கூத்தாடிகளோடு குந்திக் குடித்து, செடி முருங்கை மரத்தடியில் கள் குடித்து வாழ்ந்து வந்த ஒரு எழுத்தாளனை, வாழ்வு பெங்களூர் என்ற மாநகரத்துக்குக் கைபிடித்து அழைத்துப் போகிறது. ஒரு படைப்பாளியின் நிலப்பரப்பும், வாழ்விடமும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அவன் எழுத்தின் வழி கசிவதை நாம் எப்போது கவனிக்கத் தவறுகிறோம்?

அதன் பிறகும் அவர்களிடமிருந்து ஒன் றிரண்டு மகத்தான படைப்புகள் பீறிடுவது மாதிரித் தெரியலாம், அது சொந்த ஆற் றில் நீந்தித் திரிந்த மீனைத் தூக்கித் தரையில் வீசும்போது இன்னும் கொஞ்சம் உயிர்ப்போடு துள்ளி நம்மை ஏமாற்றுமே அது. அடங்குதலுக்கு முந்தைய ஆர்ப்பரிப்பு.

என் கணிப்பில் தன் வாழ்வின் மொத் தத்தையும் படைப்பிலக்கியத்தில் ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ என்ற தன் மொத்தச் சிறுகதைத் தொகுப்பிலும், மற்றவற்றைத் தன் தொடர் அனுபவப் பகிர்விலும் அவன் எழுதி நிறைவு செய்திருக்கிறான்.

எல்லா மரணங்களுமே புதிரானவைதான்.

நேற்று காலையிலிருந்து ஒரு கவிஞனை ஒரு எழுத்தாளனை ஒரு நண்பனை, உன் தொலை பேசியில் அழைத்திருக்கிறாய். எல்லோரையும் வழக்கம்போல் தொலை பேசியை அணைத்து விடாதே எனக் கெஞ்சியிருக்கிறாய்!

எதையோ சொல்லத் தடுமாறியிருக்கிறாய் நண்பா. ஜான் ஆப்ரகாம் என்ற கலகக் காரனும் மாடியிலிருந்து இதே தடுமாற்றத் தோடுதான் மரிப்பதற்குத் தரையைத் தேர்ந் தெடுத்திருக்கிறான். உன்னை மாநகரச் சுடுகாட்டின் மின் அடுப்பிற்கு உள்நுழைக் காமல், கன்னிவாடியின் சொந்த மண்ணில் புதைக்கப் போகிறோம். முன்கூட்டியே உன் பேனாவை மகள் மகாஸ்வேதாவின் கைக ளுக்கு மாற்றியிருக்கிறாய். போய்வா நண்பா!

பவா செல்லத்துரை எழுத்தாளர், எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: bavachelladurai@gmail.com









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x