Last Updated : 19 Mar, 2017 12:12 PM

 

Published : 19 Mar 2017 12:12 PM
Last Updated : 19 Mar 2017 12:12 PM

நாடக முன்னோட்டம்: இன்னமும் எரியும் காண்டவ வனங்கள்

பாகப் பிரிவினையில் கிடைத்த வனப்பகுதியைத் தாங்கள் வசிப்பதற்கான நகரமாக மாற்றிக்கொள்கிறார்கள் பாண்டவர்கள். அதோடு நிற்காமல் மீதமுள்ள காடு முழுவதையும் அக்கினியின் துணையோடு அழிக்கிறார்கள். மாவீரன் அர்ச்சுனனும் அவனுக்குத் துணை நிற்கும் மாயக் கண்ணனும் சேர்ந்து பெருங்காட்டின் மீது போர் தொடுக்கிறார்கள். அக்கினி பகவானின் துணையோடு வெந்து தணிகிறது காடு. அடர்காட்டின் மாமரங்கள் பற்றி எரிகின்றன. அஸ்திரங்களின் வெம்மையைத் தாங்க முடியாமல் காட்டின் உயிரினங்கள் கதறியபடி உயிரை விடுகின்றன. சில உயிரினங்கள் தப்பித்து ஓடுகின்றன.

மகாபாரதத்தில் வரும் இந்தக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு ந.முத்துசாமி எழுதிய ‘காண்டவ வன தகனம்’ பிரதி, பாரதக் காட்சிகளை மேடையேற்றத்திற்குத் தோதாக நடிகர்களைப் பாத்திரமாகவும் கதைசொல்லிகளாகவும் வடிவமைத்திருக்கிறது.

இந்தப் பிரதி ப்ரஸன்னா ராமஸ்வாமியின் இயக்கத்தில் மேடையாக்கம் செய்யப்பட விருக்கிறது. அந்தக் கதைசொல்லிகள் காலத்தில் முன்னும் பின்னுமாக ஊடாடித் தற்கால அரசியலைப் பேசும் விதமாகத் தன்னுடைய வசனங்களையும் கதையாடலில் சேர்த்திருக்கிறார் ப்ரஸன்னா.

முத்துசாமி, ப்ரஸன்னா இருவருமே நவீன நாடகத் துறையில் பல ஆண்டுகளாக இயங்கி வருபவர்கள். நாடகம் சார்ந்த பல்வேறு பரிசோத னைகளை மேற்கொண்டுவருபவர்கள். நாடகத் துறைக்குச் செய்திருக்கும் பங்களிப்புக்காகப் பல விருதுகளையும் பெற்றவர்கள்.

நாடக, ஆவணப்பட இயக்குநரான ப்ரஸன்னா, தனது நாடகங்களைப் பன்முகக் குறியீடுகளாக உருவாக்குபவர். காண்டவ வனத்தின் குரலையும் அவ்வகையிலேயே பிரதிபலிக்கச்செய்கிறார். இசை, நடனம், விளம்பரக் குறியீடுகள், திரைப் பாடல் வரிகள், தொலைக்காட்சிப் படிமங்கள் முதலான பல்வேறு ஊடகங்களைத் தன் பிரதியின் ஊடுபாவாக அமைத்து அதன் மூலம் பிரதியின் பன்முக அர்த்தங்களைக் கூட்டுவது ப்ரஸன்னாவின் கலை.

‘காண்டவ வனம்’ நாடகம் மகாபாரதச் சட்டகத்தை விட்டு வெளியே வந்து நமது சமகாலப் பொதுவெளிசார் அரசியலைப் பேசுகிறது என்கிறார் ப்ரஸன்னா. இன்றும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வசிப்பிடங்கள் காலிசெய்யப்படுகின்றன. பழங்குடி இன மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். காட்டுயிர்கள் இறக்கின்றன அல்லது வேறிடங்களுக்குத் துரத்தப்படுகின்றன என்று சொல்லும் ப்ரஸன்னா, தனது நாடகம் இந்தச் செயல்களுக்குப் பின்னால் உள்ள அவல அரசியலைப் பேசுகிறது என்கிறார். “காண்டவ வனங்கள் இன்னமும் எரிகின்றன. அர்ச்சுனன்களும் கிருஷ்ணன்களும் இன்று வேறு வடிவம் எடுத்து இயற்கையின் மீது படையெடுக்கிறார்கள். காண்டீபங்கள் நவீன வடிவங்களை எடுத்திருக்கின்றன” என்று தனது நாடகத்தின் உள்ளார்ந்த குரலை எதிரொலிக் கிறார் ப்ரஸன்னா.

பிரதியாக ஒரு நாடகம் தரும் அனுபவத்துக்கும் மேடையேறும்போது கிடைக்கும் அனுபவத்துக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. இசை, நடனம், நடிகர்களின் வசன உச்சரிப்பு, உடல் மொழி, அரங்க அமைப்பு, ஒளி அமைப்பு எனப் பல்வேறு அம்சங்கள் நாடகத்தின் அர்த்தங் களை விரிவுபடுத்தக்கூடியவை. ஓவியர் எம்.நடேஷின் அரங்க, ஒளி அமைப்பும் ஓவியர் குருநாதனின் நவீன ஓவியக் கலை மேடைப் பொருட்களைப் பயன்படுத்திய விதமும் நாடகம் தரும் காட்சியனுபவத்தைப் பல மடங்கு கூட்டியிருக்கிறது என்கிறார் இயக்குநர்.

‘காண்டவ வனம்’ நாடக நிகழ்வு மார்ச் 18 முதல் ஏப்ரல் 2 வரை விருகம்பாக்கம், ஐயப்பா நகரில் அமைந்துள்ள கூத்துப்பட்டறை அறக் கட்டளையின் அரங்கில் மாலை வேளைகளில் நடக்கவிருக்கிறது. அனுமதி இலவசம் எனினும் முன்பதிவு அவசியம் என்று நாடகக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு: 044-65373633, இணையதளம்:http://www.koothu-p-pattarai.org.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x