தலித் தீர்ப்புகளின் பின்னணி

தலித் தீர்ப்புகளின் பின்னணி
Updated on
1 min read

சட்ட மாமேதை, இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூக நீதிக் காவலர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பாபா சாகேப் அம்பேத்கரின் செயலும், சொல்லும் அத்துனை வலிமை பெற்றவை. அப்படி அம்பேத்கர் சொன்ன கூற்றுகளைக் கொண்டு தலித் மக்கள் தொடர்புடைய வழக்குகள் பலவற்றை விசாரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைக் கூறியவர் நீதிபதி கே.சந்துரு. ஒவ்வொரு தீர்ப்பிலும் அம்பேத்கரின் கூற்று, அவருக்கு எப்படி உதவியது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் நூல்தான் நீதியசரர் கே.சந்துரு எழுதியுள்ள ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்.

சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.

இந்நூலில் பல வழக்குகளைச் சந்துரு குறிப்பிட்டுள்ளார். அதில் பஞ்சமி நிலங்கள் பறிப்பு வழக்கும் ஒன்று. செங்கல்பட்டில் பஞ்சமி நிலங்கள் பறிப்புக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரித் தொடரப்பட்ட வழக் கில் தான் கூறிய தீர்ப்பைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார் சந்துரு. அதோடு தலித் மக்களுக்குப் பஞ்சமி நிலங்கள் ஏன் வழங்கப்பட்டன, அந்நிலங்கள் எப்படிப் பறிக்கப்பட்டன என்பதையும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட மோதல்களில் வேளாளர்கள் மற்றும் தலித்துக்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டதையும், காவலர்கள் முயற்சியால் அந்த வழக்குகளை வாபஸ் பெறத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் அம்பேத்கரின் வாசகங்களை மேற்கோள் காட்டித் தீர்ப்பு வழங்கியதையும் நூலாசிரியர் அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படிப் பல வழக்குகளின் பின்னணி யையும் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.

‘அம்பேத்கரின் ஒளியில் எனது தீர்ப்புகள்’என்ற இந்த நூல், தலித் மக்கள் தொடர்பான வழக்குகளை ஆவணப்படுத்தும் ஒரு நல்ல முயற்சி.

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
கே.சந்துரு
மணற்கேணி
முதல் தளம், பு/எண்:10, ப/எண்:288, டாக்டர் நடேசன் சாலை, சென்னை-05
விலை : ரூ.95
கைப்பேசி : 9443033305

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in