விடுப்பூக்கள்: 100 மலையாளப் புனைவுகள்

விடுப்பூக்கள்: 100 மலையாளப் புனைவுகள்
Updated on
1 min read

100 மலையாளப் புனைவுகள்

100 மலையாளப் புனைவு நூல்கள் ஃப்ராங்ஃபர்ட் சர்வதேசப் புத்தகக் காட்சியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மலையாள இலக்கியங்களுக்கு உலகக் கவனம் பெற்றுத்தரும் வகையில் இதற்கான முயற்சியை துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. இதற்கு முன்பு டிசி புக்ஸ் பதிப்பகம் மட்டுமே மலையாளப் பதிப்பகமாக இந்தப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டுள்ளது.

தமிழில் காலச்சுவடு பதிப்பகம் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டுவருகிறது. இந்த ஆண்டும், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அ.முத்துலிங்கம், சல்மா, தேவிபாரதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் காலச்சுவடு அறிமுகப்படுத்தவுள்ளது. மலையாளப் பல்கலைக்கழகம்போல் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முயற்சி எடுத்துப் பெருமளவில் தமிழ்ப் புனைவுகளைச் சர்வதேசப் புத்தகக் காட்சிக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

திரைப்படமாகும் தமிழ் நாவல்

உலகமயமாக்கல் பின்னணியில் இரா.முருகவேள் எழுதிய நாவல் மிளிர் கல். இந்நாவலை அடிப்படையாகக்கொண்டு புதுப் படம் ஒன்று உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மீரா கதிரவன் இயக்குகிறார். இவரது இரண்டாவது படம் விழித்திரு, விரைவில் திரைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து இவர் ‘மிளிர்கல்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் முறைப்படியான உரிமையை நாவலாசிரியர் இரா.முருகவேள் மீரா கதிரவனுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். பழந்தமிழ்ச் சமூகத்தில் உலகமயமாக்கல் ஊடுருவுவதால் ஏற்படும் விளைவுகளே இந்நாவல். கண்ணகி, உலகமயமாக்கம் எனப் பல திசையில் பயணப்படவுள்ள இந்தப் படம் விறுவிறுப்பானதாகவும் சிந்திக்கவைக்கக்கூடியதாகவும் இருக்குமென்று மீரா கதிரவன் கூறுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in