இரவாடி, பகலாடி, பொழுதாடி?

இரவாடி, பகலாடி, பொழுதாடி?
Updated on
1 min read

இரவில் மட்டும் தன் இருப்பிடத்தை விட்டு வெளிவந்து இரைதேடும் உயிரினங்களுக்கு இரவாடி என்று பெயர். ஆங்கிலத்தில் நாக்டர்னல்கிரீச்சர் (nocturnal creature). பெரும்பாலான ஆந்தைகள், வௌவால்கள் போன்றவை இரவாடிகளாகும். இரவாடிகளுக்கு மற்ற விலங்குகளைவிட மோப்ப உணர்வு, செவியுணர்வு போன்றவை நுட்பமாக இருக்கும். இருட்டிலும் பார்க்கும் விதத்தில் அவற்றின் கண்கள் நுட்பமாக அமைந்திருக்கும். இதேபோல் பகலில் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்குப் ‘பகலாடிகள்’என்று பெயர், ஆங்கிலத்தில் டயர்னல் (diurnal). அந்திப் பொழுதிலும், விடியற்பொழுதிலும் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ‘பொழுதாடிகள்’என்று பெயர். ஆங்கிலத்தில் கிரிப்ஸ்கிலர் (crepuscular). தங்களுக்குத் தகுந்தாற்போல், பகல், இரவு ஆகிய இரு நேரங்களிலும் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ‘இருபொழுதாடிகள்’என்று பெயர், ஆங்கிலத்தில் கேதிமரல் (cathemeral) என்று பெயர்.

இரவாடிக்கு ‘இரவு வாழ்வி’என்ற சொல்லும் பகலாடிக்கு ‘பகல் வாழ்வி’என்ற சொல்லும் புழக்கத்தில் உள்ளபோதிலும், தமிழில் எழுதும் சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் இரவாடி, பகலாடி என்ற சொற்களே பொருத்தமானது என்று கருதுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in