Published : 04 Mar 2017 10:24 AM
Last Updated : 04 Mar 2017 10:24 AM
வங்க தேச உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் மாற்றுத் திறனாளிகளுக்கான செயல்பாட்டாளருமான பாரிஸ்டர் ஸாதியா அர்மான் கவிஞராய் உருவெடுத்திருக்கும் நூல் இது. சமூகத்தில் பெண்களின் மேன்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் 70 கவிதைகளைக் கொண்ட இந்நூலில், பாபுல் முகம்மதுவின் கோட்டோவியங்கள் பெரும்பாலான கவிதைகளின் உயிர்ப்பை சிறப்பாகப் பதிவு செய்கின்றன.
பலியாட்டையும் பெண்ணையும் ஒப்புமை கூறும் குறுங்கவிதை, சமூகத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் கூறுகிறதெனில், தாய்மையின் பெருமையை எடுத்துரைக்கும் கவிதையோ கருப்பையில் பிரபஞ்சத்தையே வளர்த்துவரும் மகிமையைச் சித்தரிக்கிறது. காதல் இல்லாத கவிதையா? பள்ளிப் பருவ மயக்கத்திலிருந்து முன்னாள் காதலன் ஏற்படுத்திய உளமாற்றம் வரை பல வண்ண சித்திரங்களையும் இத்தொகுப்பில் காண முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் மனநிலையைத் தெரிவிக்கும் ஆடிகளாக இக்கவிதைகளில் பலவும் திகழ்கின்றன.
- வீ.பா.கணேசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT