Published : 16 Jan 2014 10:50 AM
Last Updated : 16 Jan 2014 10:50 AM

திருக்குறளில் இல்லாதது எதுவும் இல்லை: திருவள்ளுவர் விருது பெற்ற தைவான் கவிஞர் யூசி பேச்சு

திருக்குறளில் எல்லாம் உள்ளன. இல்லாதது எதுவும் இல்லை என்று திருவள்ளுவர் விருது பெற்ற கவிஞர் யூசி (தைவான்) தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கத்தில் புதன்கிழமை மாலை நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழாவிற்கு தலைமை தாங்கினார். செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்தார்.

நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செலவம், உலக கவிஞர் யூசி-க்கு (தைவான்) திருவள்ளுவர் விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழை வழங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவிக்கான அரசாணைகளை வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர் ஓ.பன்னீர்செலவம் பேசியதாவது:

மக்கள் காலம்காலமாக கொண்டாடி வந்த பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், முதல்வர் ஜெயலலிதா தைத் திங்கள் முதல் நாளான பொங்கலை தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் அறிவித்தார். தை பிறந்தால் வழி பிறக்கும். புதிய பாரதத்தை உருவாக்க முதல்வர் ஜெயலலிதாவை தவிர, வேறு யாராலும் முடியாது. இந்திய பிரதமராக முதல்வர் ஜெயலலிதாவை மக்கள் அமர்த்து வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவிஞர் யூசி பேசியதாவது:

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் வாழ்க்கை நெறிகள் பல பொதுவாக உள்ளன. திருக்குறளில் எல்லாம் உள்ளன. இல்லாதது எதுவும் இல்லை. திருவள்ளுவர், ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாக, தந்தை யாக, கணவனாக, நண்பனாக, குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை குறிப் பிட்டுள்ளார். திருவள்ளுவர் எழுதிய 1,330 குறள்களும் மிக உன்னத கருத்துக்களை தெரி விக்கின்றன. உலக அளவில் எனக்கு பல விருதுகள் கிடைத்தி ருந்தாலும், தமிழக அரசு அளித்த திருவள்ளுவர் விருதினை பெருமை யாக கருதுகிறேன். திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்க்க எனக்கு வாய்ப்பு வழங்கியதோடு, திருவள்ளுவர் விருதையும் அளித்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ. ராசாராம், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர், சென்னை மேயர் சைதை துரைசாமி, பாலகங்கா எம்.பி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x