

சிங்கள அரசின் அடக்குமுறைகளில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வலியை ரத்தமும் சதையுமாக விவரிக்கும் நூல் இது. பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் சாட்சியாக, பங்கெடுத்தவராக, பாதிக்கப்பட்டவராக, பதிவுசெய்தவராக என்று ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு. ஊடகவியலாளர், கவிஞர், புகைப்படக் கலைஞர் என்று பன்முகம் கொண்ட கருணாகரன் இந்த நேர்காணல்கள் வழியே, போரின் கொடுங்கரங்களால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
இறுதிக் கட்டப் போரின்போதும், போருக்குப் பிறகான காலகட்டத்திலும் மக்கள் சந்தித்த அனுபவங்கள், அதிர வைக்கும் சம்பவங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அறுபது ஆண்டு கால நினைவுகளைப் பகிரும் புகைப்பட பத்திரிகையாளர் சங்கர கம்பர் கதிர்வேலு, இலங்கை அரசு நிகழ்த்திய ‘அடையாள அழிப்பு அரசியல்’ தொடர்பாக விரிவாகப் பேசும் தொல்பொருள் சேகரிப்பாளர் குணா, போர் ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகள் பற்றிப் பேசும் மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ், மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சி.சிவகுமார் என்று பலரின் குரல்கள் பதிவாகியிருக்கின்றன.
- சந்துரு