Last Updated : 23 Sep, 2018 08:59 AM

 

Published : 23 Sep 2018 08:59 AM
Last Updated : 23 Sep 2018 08:59 AM

கிரிஷ் கர்னாட்டின் புதிய நாடகம்

நாடக ஆசிரியர், நடிகர், சினிமா இயக்குநர், சமூகச் செயல்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் கிரிஷ் கர்னாட். ‘துக்ளக்’, ‘ஹயவதனா’, ‘நாகமண்டலா’, ‘யயாதி’ என்று அவருடைய புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்துமே வரலாற்றையும் தொன்மங்களையும் வேராகக் கொண்டு நவீனத்துவத்தில் கிளைத்து வளர்ந்தவை. வரலாற்றை விமர்சிப்பதன் வழியாக அல்லது வரலாற்றின் சிறப்புகளை எடுத்துரைப்பதன் வழியாக சமகாலப் பிரச்சினைகளைத் தனது படைப்புகளில் பேசுவது அவரது எழுத்து பாணியானது.

16-ம் நூற்றாண்டின் விஜயநகர சாம்ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்‌ஷஷ தங்காடி’ என்ற நாடகமொன்றை சமீபத்தில் எழுதியிருக்கிறார் கிரிஷ் கர்னாட். கிருஷ்ணதேவராயரின் மருமகனான கொடுங்கோலன் ராமராயருக்கு இந்நாடகத்தில் மனிதத்தன்மை கொடுக்க முயன்றிருக்கிறார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரும் இதே வரலாற்றுப் பின்புலத்தை, இதே கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தலைக்கோட்டை’ (1919) நாடகத்தை எழுதியிருக்கிறார். இருவரும் ஒரே வரலாற்றை வேறுவேறு விதமாக அணுகிறார்கள். கிரிஷ் கர்னாட் வரலாற்று நிகழ்வுகளை அப்படியே வைத்துக்கொண்டு மனிதர்களின் மனங்களை வாசிக்க முயல்கிறார்.

‘துக்ளக்’ நாடகத்தின் மூலமாக முகமது பின் துக்ளக் மீதான கட்டுக்கதைகளை உடைத்து அவரது மனித முகத்தையும் காட்டினார் கர்னாட். ஆனாலும், அவரின் அபத்தமான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியும் ஹம்பியின் சேதாரங்களும் இன்றைக்கு மதவாத அரசியலால் சிக்குண்டு இருக்கும் நிலையில் கர்னாட்டின் வரலாற்றுப் பார்வை அதன் மீதான மாற்றுப்பார்வையையும் உருவாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x