Published : 03 Mar 2018 10:18 AM
Last Updated : 03 Mar 2018 10:18 AM

நூல் நோக்கு: ரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்?

ரசியலில் தீவிரமாக இயங்கிவரும் 25 தமிழகத் தலைவர்களையும் வெங்கய்ய நாயுடு, எடியூரப்பா ஆகிய பக்கத்து மாநிலத்துத் தலைவர் களையும் துக்ளக் இதழுக்காகப் பேட்டி கண்டு, அதை நூலாகவும் தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ரமேஷ். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிலதாவை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியலில், அவர்களோடு சேர்ந்தும் பிரிந்தும் மீண்டும் சேர்ந்தும் இயங்கிய சில அரசியல் தலைவர்களின் அனுபவங்கள் வழியாக மூவரது இயல்பையும் அணுகுமுறையையும் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளோடு இணங்கியும் பிணங்கியும் அரசியல் நடத்திவரும் பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பாஜக மற்றும் தலித் இயக்கத்தின் தலைவர்களும் தங்களது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

1989-ல் முதல்வர் கருணாநிதி இலவச மின்சாரத்தை அறிவித்தார் என்று நினைவுகூர்கிறார், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் துரைமுருகன். ஆனால், குமரி அனந்தனோ, அத்திட்டம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்றும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியில், இரண்டரை ஏக்கர் நிலம் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கருணாநிதி அந்த வரம்பை நீக்கி, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார் என்கிறார். இப்படி தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் சில விஷயங்களை இந்தப் புத்தகம் இன்னும் தெளிவாக்கு கிறது. எனினும், இருள் சூழ்ந்திருக்கும் சில பகுதிகளை அப்படியே கடந்து விடவும் முயற்சிக்கிறது.

1996 தேர்தலில் காங்கிரஸ் தனியாகத் தேர்தலைச் சந்தித்தால், ஆதரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது ரஜினி பிரதமரால் மிரட்டப்பட்டார் என்கிறார் ப.சிதம்பரம். பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த ரஜினி, அதுபற்றி தன்னிடம் கூறியதற்கு மாறாக ப.சிதம்பரத்தின் கருத்து இருக்கிறது. எனவே, அதைப் பிரசுரிக்க மாட்டேன் என்று சோ.ராமசாமி மறுத்துவிட, ப.சிதம்பரமும் பேட்டியைத் தொடர்வதற்கு மறுத்து விட்டார். உண்மை என்னவென்பதைச் சந்தித்தவர்தான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும், திரை நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை நமது அரசியல் தலைவர்கள் ரஜினிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

எனது அரசியல் பயணம், பேட்டி-தொகுப்பு:

துக்ளக் ரமேஷ்,

அல்லயன்ஸ், சென்னை-4, விலை ரூ.500.

044 2464 1314

- புவி

காஞ்சியின் மைந்தன்

காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சந்நியாசியாகப் பேர் பெற்றதுடன், ஜென் பெளத்தத்தையும், குங்பூ என்கிற தற்காப்புக் கலையையும் உலகுக்குக் கற்றுத் தந்த, தமிழராகக் கருதப்படும் போதி தர்மரின் காலகட்ட அரசியலை விவரிக்கும் நாவல். பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற கயல் பரதவன், தமிழக வரலாற்றுடன், அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறை களையும் ஆராய்ந்து பல தகவல்களுடன் நாவலைக் கொண்டுசெல்கிறார். அரசியல் சூழ்ச்சிகளால் காஞ்சியிலிருந்து தப்பிச் செல்லும் இளந்திரையன் பிக்குணிகள் கூட்டத்தோடு சேர்வதும், தான் யார் என்ற அடையாளம் இல்லாமல் இருப்பதும், பின்னர் நினைவுகள் திரும்பி தனது கலைகளைப் போதிப்பதுமாகப் பல திருப்பங்களுடன் செல்கிறது. நான்கு பாகங்களும் சேர்த்து 2,800 பக்கங்களுக்கு மேல் கொண்டது.

- நீரை.மகேந்திரன்

போதி தர்மா, சரித்திர நாவல்,

கயல் பரதவன்

சக்திமலர் பப்ளிகேஷன்ஸ்,

சேயூர், திருப்பூர் மாவட்டம். விலை ரூ.1,700

(நான்கு பாகங்களும் சேர்த்து),

விற்பனை உரிமை:

நர்மதா பதிப்பகம்.

044- 2433 4397

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x