Published : 13 Apr 2019 09:33 AM
Last Updated : 13 Apr 2019 09:33 AM

நூல் நோக்கு: இரவில் கரையும் காகம்

ஒவ்வொரு கணமும்

சுகதேவ்

நோஷன் பிரஸ்,

சேத்துப்பட்டு, சென்னை-31

விலை: ரூ.170

மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக  அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை.

-புவி

சாவித்திரியின் கவித்துவக் காதல்

சாவித்திரி கணேஷ்

மு.ஞா.செ.இன்பா

கைத்தடி பதிப்பகம்

சென்னை – 41.

விலை: ரூ.225

 044-4857 9357

‘நடிகையர் திலகம்’ சாவித்திரி! இந்தப் பெயரைக் கேட்டாலே கண்கள் நீர்த்தேக்கங்களாக மாறிவிடக்கூடிய ஐம்பதுகளைக் கடந்த பெண்கள் இப்போதும் உண்டு. நடிப்பின் மேதமை, இரக்க குணம் இவற்றைக் கடந்து சாவித்திரிக்குள்ளே ஊடாடிய காதல் உள்ளத்தை, ஜெமினி கணேசனை நினைத்து உருகி, ‘மயங்குகிறாள் ஒரு மாது..’ என்ற பாடலுக்குத் தானே இலக்கணமாக விளங்கிய சாவித்திரியின் கவித்துவ அன்பை, காதல் ரசம் சொட்டச் சொட்ட ரசனையோடு வர்ணித்துள்ளார் இன்பா. காதலின் மென்மையுடன் சாவித்திரியின் வாழ்வின் முக்கியப் பகுதிகள் சுவாரஸ்யமான மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன. சாவித்திரியின் ஏராளமான அரிய புகைப்படங்களும் தரமாக அச்சாகியிருக்கின்றன. ஆதாரம் ஏதும் இல்லாத, உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் சில இடங்களில் வருவதை மட்டும் கவனமாக அணுகியிருக்கலாம்.

- ஸ்ரீதர் சுவாமிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x