Last Updated : 09 Mar, 2019 09:36 AM

 

Published : 09 Mar 2019 09:36 AM
Last Updated : 09 Mar 2019 09:36 AM

பேபல் நூலகத்தின் புத்தகங்கள்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற ஆர்வலர்கள், புகைப்படக் கருவியோடு வார இறுதி நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், புகைப்படம் எனும் கலை வடிவம் அடைந்துவந்திருக்கும் பரிணாம வளர்ச்சி குறித்த அக்கறைகள் அவர்களிடம் இருக்கின்றனவா எனும் கேள்விக்குப் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. தங்களின் இயல்பான கலை ஆர்வத்தோடு அக்கலை வடிவத்தை வளப்படுத்திக்கொள்வதிலும் அக்கறைகாட்ட வேண்டியது அவசியம். புகைப்பட ஆர்வலர்களுக்காக இதோ தொடங்கிவிட்டது ‘சென்னை போட்டோ பியெனாலே’ (Chennai Photo Biennale). இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விழாவை ‘பியெனாலே’ என்கிறோம்.

பிப்ரவரி 22 அன்று தொடங்கிய ‘சென்னை போட்டோ பியெனாலே’ மார்ச் 24 வரை நடைபெறுகிறது. அரசு கவின்கலை கல்லூரி, அரசு அருங்காட்சியகம், சென்னைப் பல்கலைக்கழகம், சோழமண்டலம் ஆர்ட் கேலரி, ஆர்ட் ஹவுஸ் கேலரி, கஸ்தூரிபாய் நகர், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை எம்ஆர்டிஎஸ் ரயில்நிலையங்கள் உள்ளிட்ட பதினைந்து இடங்களில் நடைபெறுகிறது. சர்வதேச புகைப்படக் கலைஞர்கள், கல்லூரி மாணவர்களின் புகைப்படக் காட்சிகளோடு உரையாடல், பயிற்சிப் பட்டறை, புகைப்படக் கலை பற்றிய திரைப்படங்களின் திரையிடல், சர்வதேச மாநாடு போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. புகைப்படக் கலையைக் கொண்டாடுவதற்காக 2016-ல் முதன்முதலாக சென்னையில் தொடங்கப்பட்ட இந்தக் கலை நிகழ்வு, தற்போது இரண்டாவது பதிப்பாக நடைபெறுகிறது.

சென்னை போட்டோ பியெனாலேவின் ஒரு பகுதியாக, நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டியில் ‘பேபல் நூலகம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் புகைப்படக்காட்சியானது புத்தகங்கள், நூலகங்களின் பல்வேறு பரிமாணங்களை விளக்குகிறது. இந்தோனேசியாவைச் சேர்ந்த புடு சாயோகா, ஜெர்மனியைச் சேர்ந்த லிஸ் ஃபெர்னாண்டோ, கனடாவைச் சேர்ந்த அங்கெலா க்ரயுவெர்ஹோல்ஸ் ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

புடு சாயோகாவின் படைப்புகள், இந்தோனேஷியாவிலுள்ள மத்திய ஜாவாவின் கடைக்கோடி கிராமத்தில் வாழும் குதிரைப் பராமரிப்பாளர் ரித்வான் சுசூரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர் தன் குதிரையை, சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்காக நகரும் நூலகமாகப் பயன்படுத்திவருகிறார். குதிரை நூலகத்தை ஆவணப்படுத்தியிருக்கும் இந்தப் படைப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அங்கெலா க்ரயுவெர்ஹோல்ஸின் ‘பிரைவேஷன்’, ‘தி எம்ப்டி ஷெல்ஃப்’ ஆகிய இரண்டு படைப்புகள் பெரிய புகைப்படப் புத்தகங்களாக இடம்பெற்றிருக்கின்றன. 25 ஆண்டுகளாக வீட்டில் தானும் தன் கணவரும் சேகரித்துவைத்திருந்த புத்தகங்கள் ஒரு தீவிபத்தில் அழிந்துபோனதை அடிப்படையாகக் கொண்டு ‘பிரைவேஷன்’ என்ற படைப்பை உருவாக்கியிருக்கிறார். ‘பிரைவேஷன்’ என்றால் ‘வாழ்க்கைக்கு அவசியமானவற்றில் குறைபாடு’ என்று பொருள். புத்தகங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்துபோவதையும் அழிக்கப்படுவதையும் இதில் விளக்குகிறார். புத்தகம் என்பது புத்தகமாக, ஆவணமாக, இடமாக, வரலாறாக, எதிர்காலமாக, நிறுவனமாக, அடையாளமாக, தீர்வாக எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கும்படியாக அவரது ‘தி எம்ப்டி ஷெல்ஃப்’ படைப்புகள் அமைந்திருக்கின்றன.

- என்.கௌரி,

தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x