Published : 02 Mar 2019 10:10 AM
Last Updated : 02 Mar 2019 10:10 AM
நினைவுகள் அழிவதில்லை
அண்ணாவின் மேடைப் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரைப் பின்தொடர்ந்து, பொதுவுடைமை இயக்கத்தில் முழுநேர ஊழியராகி, புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்று, அதன் காரணமாக தலைமறைவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்துசேர்ந்தவர் பாளையம் வடமலை. அவரது நினைவையொட்டி அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல், கலை, இலக்கிய ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. முதல் கட்டுரை, அவரது மகனும் ‘தமிழ்ப் பேரரசு’ கட்சித் தலைவருமான வ.கௌதமன் எழுதியது. பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியருடைய தியாகத்தில் அவரது குடும்பமும் சேர்ந்து பங்கேற்க வேண்டியிருக்கும் நிலையை எடுத்துச்சொல்லும் இந்தக் கட்டுரையை கண்கலங்காமல் கடந்துவிட முடியாது.
- புவி
தலைவணங்காத் தமிழ்த்தேசியப் போராளி அ.வடமலை
பன்மைவெளி வெளியீடு
திருவல்லிக்கேணி, சென்னை-78
விலை: ரூ.250
94439 18095
வெற்றிக்கு ஆறு படிகள்...
உயர்ந்த எண்ணம், தன்னம்பிக்கை, துணிவு, திட்டமிடல், கடின உழைப்பு, விடாமுயற்சி என்று வெற்றிக்கான ஒவ்வொரு படிநிலையின் முக்கியத்துவத்தையும் விவரித்து எழுதியிருக்கிறார் இந்தியக் காவல்பணித் துறை அதிகாரியான ஆ.அமல்ராஜ். வெற்றிபெற்றவர்களின் தற்புகழ்ச்சி உரையாகவோ, மேற்கோள்களின் தொகுப்பாகவோ இல்லாமல் தோல்விகளைத் தாண்டிவந்து வெற்றியை நெருங்கிப்பிடித்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இலக்குகளை எட்டுவது பெருமை என்று போதிக்காமல் அதற்கான பயணத்தில் எங்கெங்கு தடுக்கி விழ நேரும் என்பதைப் பரிவோடு சுட்டிக்காட்டி கவனப்படுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வில் வெற்றிபெறக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டும் நூல்.
- அரசன்
வெற்றியாளர்களின்
வெற்றிப் படிகள்
ஆ.அமல்ராஜ்
விஜயா பதிப்பகம்
கோயம்புத்தூர்-641001
விலை: ரூ. 200
0422 2382614
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT