நூல் நோக்கு: நித்தம் ஒரு மந்திரம்...
பத்தாம் திருமுறையான திருமந்திரம், தமிழ் மெய்யியலின் முதன்மை நூல்களில் ஒன்று. அன்பே சிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் மந்திரங்கள் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. மெய்யியலோடு வாழ்வியல் நெறிகளையும் அன்றைய நாளின் மருத்துவம், வானியல் கருத்துகளையும் போதிக்கும் திருமந்திரம், 3000 மந்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தைப் படித்து பயனடையும்வகையில் 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எளிய உரையையும் அளித்துள்ளார் திலகவதி.
தினம் ஒரு திருமந்திரம்
தொகுப்பு: திலகவதி
அட்சரா பதிப்பகம் சென்னை.
விலை: ரூ.200
94440 70000
காட்டு ராஜாவின் கதை!
ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தால் மட்டுமே வெளியுலகில் அறியப்பட்டிருந்த வீரப்பனைச் சந்தித்துப் பேட்டியெடுத்து புகைப்படத்துடன் வெளியிட்டதன் மூலம், தமிழ் இதழியல் உலகைத் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார் ‘நக்கீரன்’ கோபால். கொலை, சந்தனக் கடத்தல், ஆள் கடத்தல் என்று பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுவந்த வீரப்பன் கும்பலை எளிமையான பத்திரிகையாளர்கள் சந்தித்த சாகச நிகழ்வு அது. ஒரு பக்கம் தமிழக அதிரடிப் படை, மறுபக்கம் கர்நாடக அதிரடிப் படை. இந்தப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வீரப்பனைச் சந்தித்து தானும் தனது நிருபர்களும் வீடியோ பேட்டியெடுத்த விதத்தையும் அதில் இருந்த சவால்களையும் விறுவிறுப்பாகப் பதிவுசெய்திருக்கிறார் ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால்.
- சந்தனார்
வீரப்பன்
நக்கீரன் கோபால்
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
ராயப்பேட்டை,
சென்னை – 14.
044- 43993000
விலை:ரூ.360
