

சிங்களவர்களின் பூர்வீகம்
சிங்களவர்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகளில் பல அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்பதைச் சொல்கின்றன. ஆதி வரலாற்று நூல்களைப் பொறுத்தவரை, வங்காளத்தின் வங்கா நாட்டின் இளவரசிக்கும் லாலா தேசத்துச் சிங்கத்துக்கும் பிறந்த சிகபாகுவின் மகனான விஜயனில் தொடங்குகிறது இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீகம். இந்நூல், சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அறிவியல்பூர்வமாக சிங்களவர்களின் பூர்வீகத்தை ஆராய்கிறது. மானுடவியல், மரபணுவியல்ரீதியான ஆய்வுகளும் இந்நூலில் சுட்டிக்காட்டப்படுகின்றன. சிங்களவர்களின் வாழ்க்கை முறையில் காணப்படும் இந்தியத் தன்மை - குறிப்பாக, தென்னிந்தியத் தன்மை குறித்தும் இந்நூல் பேசுகிறது. இலங்கையின் அடையாள அரசியல் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.
- ஐசக்
கவனிக்க மறந்த ஆளுமைகள்
சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாச்சாரம், சிந்தனை ஆகிய தளங்களில் தீவிரத்தோடு இயங்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘புதிய பார்வை’ இதழில் தொடராக எழுதினார் சி.மோகன். ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களை இத்தொடர் மூலம் வெளிக்கொண்டுவந்தார். அப்போது இத்தொடர் பெரும் வரவேற்பு பெற்றது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் என்றும் மாணவச் சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் இந்நூல் சிலாகிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின்பாக இப்போது, கூடுதலாக ஏழு ஆளுமைகள் குறித்த கட்டுரைகளுடன் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியிருக்கிறது ‘நடைவழிக் குறிப்புகள்’.
- கதிரவன்