Published : 25 Oct 2018 10:09 AM
Last Updated : 25 Oct 2018 10:09 AM

‘அருணாச்சல ரமணா - பால காண்டம்’ - இசை நாடகம்

டாக்டர் அம்பிகா காமேஷ் வரின் ‘ரசா’ அமைப்பும், டாக்டர் சாரதா நடராஜனின்‘ஆர்எம்சிஎல்’ அமைப்பும் இணைந்து ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை ‘அருணாச்சல ரமணா’ என்ற இசை நாடகமாக சமீபத்தில் அரங்கேற்றின. இது 7 பகுதிகளைக் கொண்டது. இதன் முதல் பகுதியான ‘பால காண்டம்’, சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கில் சமீபத்தில் அரங்கேறியதுஆர்எம்சிஎல் அமைப்பு கடந்த1982-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 36 ஆண்டுகளாக, ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாறு, அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து 125 இசைப் படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது.‘அருணாச்சல ரமணா – பால காண்டம்’ என்ற இந்த இசைப் படைப்பு, பகவான் ரமண மகரிஷி அவதரித்த திருச்சுழி திருத்தலத்தில் தொடங்குகிறது.

 

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல்பெற்ற திருச்சுழி திருத்தலத்தில் அமைந்துள்ள பூமிநாதரை தரிசிக்க ஒரு குடும்பம் வருகிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அவர்களுக்கு திருத்தலத்தின் பெருமையையும் பூமிநாதரின் மகிமையையும் எடுத்துரைக்கிறார்.

திருத்தலப் புராணம், இசை மற்றும் நடனம் மூலம் பாங்குற விளக்கப்பெறுகிறது.கவுதம முனிவர் தனது மனைவியை சபித்த பிறகு, அதற்கு வருந்துகிறார். சஞ்சலமுற்ற மனதுடன் ஈசனின் திருநடனம் காண சிதம்பரம் செல்கிறார். அப்போது திருச்சுழி செல்லுமாறு அவருக்கு ஒரு குரல் கேட்கிறது. அந்த வேளையில் ராமபிரான் மூலம் சாபத்தில் இருந்து விடுபடுகிறாள் அகலிகை. அன்று ஆருத்ரா தரிசன நன்னாள் (திருவாதிரை நட்சத்திரம்). இருவரும் சேர்ந்து ஈசனின் திருநடனம் காண திருச்சுழி செல்கின்றனர்.அப்போது, சுந்தரம் – அழகம் மாள் தம்பதிக்கு புனர்பூச நட்சத்திரத்தில் வெங்கடராமன் என்ற மகன்பிறக்கிறான். அவனை ‘ரமணா’ என்று அழைக்கிறார் சுந்தரத்தின் தெலுங்கு மொழி பேசும் நண்பர். சிறுவன் ரமணா வளர்கிறான். சிறுகுறும்புகள் செய்து தந்தையிடம் இருந்து தப்பிக்க, திருச்சுழி கோயிலுக்குள் போய் ஒளிந்துகொள்வது அவனது வழக்கம்.

அப்போது சகாயாம்பாள் தோன்றி, அனைத்தும் ஒளியில் இருந்து வருகிறது என்று தத்துவத்தை உணர்த்துகிறாள்.அப்போது அங்குள்ள பார்வையற்ற மூதாட்டியும், ரமணா பிறந்தநேரத்தில் தான் ஓர் ஒளியைக் கண்டதாகக் கூறுகிறாள். ரமணாவை வயிற்றில் சுமந்தபோது, நெருப்பைச் சுமப்பதுபோன்று உணர்ந்ததாக அவனது தாய் அழகம்மாளும் கூறுகிறாள்.சிறு வயது முதலே ரமணா, மற்றவர்களைவிட அறிவு முதிர்ச்சியுடன் காணப்பட்டான். அவன் விளையாட்டாகக் கூறும் அத்வைத தத்துவங்களைக் கண்டு தாய் வியக்கிறாள்.தர்மத்தின் உருவமாகவே கருதப்பட்ட ரமணாவின் தந்தை சுந்தரத்தை, அவர் இறக்கும் தருவாயில் தர்மராஜனே தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். தன் தந்தைக்கு சிதை மூட்டும்போது அவர் ஏன் நெருப்பையும், அதன் வெப்பத்தையும் உணரவில்லை என்று ரமணா சிந்திக்கிறான். அப்படியென்றால் அவர் யார்? உடல் என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? என்று சிந்தித்தவாறு தனக்குத் தானே ‘‘நான் யார்?’’ என்று கேட்டுக்கொள்கிறான் ரமணா.

டாக்டர் சாரதா நடராஜனின் கதை, வசனத்தில், டாக்டர் அம்பிகா காமேஷ்வர் இயக்கத்தில் இது நாடகமாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆர்எம்சிஎல் (Ramana Maharshi Centre for Learning), ரசா அர்பிதா(Ramana Sunrithya Aalaya) அமைப்புகளைச் சேர்ந்த நடனமாமணிகள்சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கினர். மேடை அமைப்பு, முன்பதிவு செய்யப்பட்ட உரையாடல், இசை பாராட்டத்தக்கவை.திருச்சுழியில் வழிகாட்டும் பெண், பார்வையற்ற மூதாட்டி,தர்மராஜா ஆகிய வேடங்களில் டாக்டர் சாரதா நடராஜனும், அழகம்மாள், சகாயாம்பாள் வேடங்களில் டாக்டர் அம்பிகா காமேஷ்வரும் அந்தந்த பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைத்து நடனமாமணிகளும் மேடையில் அமர்ந்து ரமண நாமம்ஜெபித்ததும் இல்லாமல், பார்வையாளர்களையும் சொல்ல வைத்தது அருமை. இனிதாய் தொடங்கிய பயணம் நிறைவாய் தொடரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x