Published : 11 Aug 2018 09:22 AM
Last Updated : 11 Aug 2018 09:22 AM

இஸ்லாமிய வாசிப்பில் புதிய ஒளி!

தமிழ் முஸ்லிம் சமூகச் சூழலில் வாசிப்புப் பழக்கம் பரவலாகிவருகிறது என்றாலும் அது தனி நபர் பண்பாக வளர்கிறதே தவிர அது ஒரு கூட்டு இயக்கமாக உருவாகவில்லை. அதுபோலவே இஸ்லாமிய இதழ்களும்கூட பெரும்பாலும் மார்க்க உபதேசங்கள், இஸ்லாமிய சமூகத்துக்குள் உள்ள பிரச்சினைகள், மதக் கோட்பாடுகளின் விழுமியங்கள் போன்றவற்றிலேயே கவனம் செலுத்திவந்தன. விளைவாக, பொதுத்தள வாசிப்பு என்பது இங்கு ஒரு சமூக இயக்கமாக உருவாகவில்லை. இப்போது, இது உடைபடத் தொடங்கியிருக்கிறது.

சமூகப் பிரச்சினைகளையும், சவால்களையும் சமகாலத்துக்கு ஏற்றவாறு பதிவுசெய்வது, பொதுச் சமூகத்தின் பிரச்சினைகளையும் பிரதானப்படுத்தி விவாதிப்பது, இஸ்லாமியர்கள் சம்பந்தமான சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பது, இஸ்லாமியர்களின் வரலாற்றுச் சாதனைகள், பண்பாடு, மொழி, பாரம்பரியங்கள், பன்மைத் தன்மை, சமகால நிகழ்வுகளோடு வரலாறுகளை ஆவணமாக்குவது போன்றவை இப்போதைய இஸ்லாமிய இதழ்களில் பரவலாகத் தொடங்கியிருக்கின்றன. அரசியல், கல்வி உள்ளிட்ட விஷயங்களுடன் பொதுப் பத்திரிகையாக்கும் முயற்சிகளும் உத்வேகம் அடைந்திருக்கின்றன. கூடவே, வாசிப்பைச் சமூக இயக்கமாக்கும் பணிகளில் இதழ்கள் தங்களை இணைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

இஸ்லாமியச் சமூக இதழ்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றான ‘சமரசம்’ இதழின் துணை ஆசிரியர் வி.எஸ்.முஹம்மத் அமீன், வாசிப்பை மையப்படுத்தி ‘சமரசம் பத்தாயிரம்’ என்ற பரப்புரையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கும் பயணம் இது. ‘சமரசம்’ வாசிப்பு வட்டத்தைத் தாண்டி பள்ளிவாசல்கள், கல்லூரிகள் என்று மக்கள் கூடும் இடங்களைத் தேடிச்சென்று வாசிப்பு ஏன் முக்கியம் என்று பேசியிருக்கிறார் அமீன். அவரது பயணத்தின் பயனாக சில பள்ளிவாசல்களில் புதிதாக நூலகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமான விஷயம். ஒரு கூட்டு இயக்கமாக வாசிப்பும், சிற்றிதழ் சூழலும் தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் வளர்வதன் பாதையில் புதிய வெளிச்சம் தென்படுகிறது.

- புதுமடம் ஜாபர் அலி,

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x