

சுகுமாரன் கதைகள், 1983இல் தொடங்கி இந்த 2025 வரையிலான நீண்ட காலகட்டத்தில் பயணித்திருப்பவை. இந்தக் காலகட்டத்திற்குள் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள், சுகுமாரன் என்கிற தனிமனிதனின் உள்ளுக்குள் நடந்த மாற்றங்கள் ஆகிய இரு அம்சங்களையும் பிரதிபலிப்பவையாக இந்தக் கதைகள் உள்ளன. தன்னுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத, பாதிக்காத ஒரு சம்பவத்தைக் கதைப் பொருளாகக் கொள்ள சுகுமாரனுக்கு விருப்பம் இல்லை. சுகுமாரன் குறைவாக எழுதியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
புதுமைப்பித்தன் தொடங்கிய தமிழ் நவீனச் சிறுகதையின் தொடர்ச்சி என இவரது கதைமொழியை வரையறுக்கலாம். கதையைச் சட்டெனத் தொடங்குவதில், அதை எடுத்துச் செல்வதில் சுகுமாரனின் சிறுகதை மொழிக்கு தயக்கமே இல்லை. சுகுமாரனின் காதல் கவிதைகளில் வெளிப்படும் நினைவேக்கம், இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளில் பல்வேறு உணர்வு சார்ந்து ஏற்படுகிறது.