

தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்புகள் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. பல்வேறு நாடுகளின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என வருவதைப் போல மலையாளம், கன்னடம், வங்கமொழி உள்ளிட்ட இந்திய மொழி இலக்கியங்களும் அதிகமாகவே மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சாகித்ய அகாதமி சமீபத்தில் வெளியிட்டிருக்கிற மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்று, ‘ஒரு பெண்மானின் கண் - மேலும் பிற கதைகள்’ எனும் பஞ்சாபி சிறுகதைகள் தொகுப்பு.
'பஞ்சாபின் செக்காவ்' எனப்படும் எழுத்தாளர் மோஹன் பண்டாரி எழுதியுள்ள கதைகள் இவை. சாகித்ய அகாதமி உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவரின் அழுத்தமான ஏழு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது என்றாலும், ஒவ்வொரு கதையும் அதன் உள்ளடக்கம், கதைபேசும் பொருள், அதன் போக்கு என அனைத்திலும் ஒரு நாவலுக்கான அடர்த்தி யையும் விஷயங்களையும் கொண்டுள்ளன.