

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்வதில் கீழடி அகழாய்வு முந்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், நகரமயமாதல், பொது நிர்வாகம், வணிகம் முதலானவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகத் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனர் என்பதையும் தங்களுக்கென தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் உரக்கச் சொல்லும் சான்றாக இது அமைந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ‘பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிக நகரங்கள்’ புத்தகம் வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர் முனைவர் வெ.வேதாசலம், தொல்லியல், கலை, வரலாற்றாய்வில் மூன்று தசாப்தங்கள் அனுபவம் மிக்கவர்.
கரூர், கோவலன்பொட்டல் (மதுரை), திருத்தங்கல், மாங்குடி, தொண்டி, அழகன்குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்களில் உள்ள தொல்லியல் தலங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் ஈடுபட்டவர். பாண்டிய நாடு என சங்ககாலம் தொட்டு அறியப்படும் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை அடக்கிய பகுதிகளின் வணிக பண்பாட்டினை உள்ளும் புறமுமாக ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார்.