

ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ, தமிழிலும் தனக்கென்ற வாசகர் பரப்பைக் கொண்டுள்ளது. அன்றாட நிகழ்வுக்கும் அதிலிருந்து வெளிப்படும் செய்திக்குமான முரண்பாட்டைக் கவிஞர் சராசரியாக மூன்று வரிகளில் கூறுவதுதான் தமிழ் ஹைக்கூவாக இருக்கிறது. திரைப்பட இயக்குநரான என். லிங்குசாமிக்கும் ஹைக்கூ கவிதைகளுக்குமான உறவு பரவலாக அறியப்பட்ட ஒன்று.
‘இஸ்திரி போடும்/தொழிலாளியின் வயிற்றில்/சுருக்கம்’ என்கிற முதல் கவிதையிலேயே வாசகர்களது கவனத்தை அவர் ஈர்த்தார். ’லிங்கூ’ என்கிற தலைப்பில் அவரிடமிருந்து இதுவரை இரண்டு ஹைக்கூ தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தற்போது ‘லிங்கூ-3: பெயரிடப்படாத ஆறுகள்’ வெளியாகியுள்ளது. ஹைக்கூ மீது தேவையற்ற சலிப்புக் கொண்டிருப்பவர்களைக் கூட எளிதில் தன்வசப்படுத்திக்கொள்கிற வகையில் பல கவிதைகள் இந்நூலில் உள்ளன.