

எனது ‘ஆறுகாட்டுத் துறை’ நாவலை எழுதி முடித்திருந்த நேரம். எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் ரமேஷ். எனது எழுத்தைப் பற்றி விசாரித்தார். “புதிய நாவல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறேன். அச்சுக்கு கொடுக்க வேண்டும்” என்றேன். “நான் ஒருமுறை பார்க்கட்டுமா?” என்றார்.
புதினம், கவிதை, கட்டுரை என இலக்கியத்தின் அத்தனை பரிமாணங்களிலும் அவர் ஜாம்பவான் என்கிற மதிப்பை அவர்மீது கொண்டிருந்தவள் நான். அதுமட்டுமல்லாமல் அவரது சிந்தனையை, பேச்சைக் கேட்கும் போதெல்லாம் நமக்குமுன் வாழ்ந்த யாரையோ நினைவுபடுத்துவது போலிருக்கும்.