

ஆதி மனிதர்கள் வெறும் ஓசைகளாலும் உடல் சைகைகளினாலும் மட்டுமே சக மனிதர்களுடனான செய்திப் பரிமாற்றங்களைத் தொடக்கக் காலங்களில் செய்துவந்தனர். பின்னர் கூரான கற்களைக்கொண்டு பாறைகளில் தீட்டிய சித்திரங்கள், குறியீடுகள் வழியாகக் கருத்துகளைப் பரிமாறியும் பகிர்ந்தும் கொண்டனர். ஓசைகள் ஒழுங்கு பெற்று, பின்னர் எழுத்து வடிவமாகி, மொழி பிறந்தது என்பர் மொழியியல் அறிஞர்கள்.
மனித வாழ்வில் நெருப்பும் சக்கரமும் எப்படி மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியதோ, அப்படியே மனிதன் பேசத் தொடங்கியதும் மகத்தானவனாக மாறத் தொடங்கினான். ஏனைய உயிர்களிடமிருந்து மனிதனை வித்தியாசப்படுத்திக் காட்டியதில், மனிதனின் பேச்சாற்றலுக்கும் முக்கியப் பங்குண்டு. எங்கே எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக்கூடாது, நாம் ஒன்றைச் சொல்வதன் வழியாகக் கேட்போருக்கு எதை உணர்த்தப்போகிறோம் என்பதறிந்து பேசுவதே சிறந்த பேச்சாகும். பேச்சென்பதும் ஒரு வகைக் கலையே.