

‘மாற்றத்திற்கான எழுத்துழவு’ எனும் முழக்கத்தோடு அரையாண்டு இதழாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து வெளிவரும் இதழிது. தமிழ் அறிவுசார் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக வந்துள்ள இந்த இதழில், காத்திரமான கருப்பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகள் இதழெங்கும் நிறைந்துள்ளன.
‘படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்’ என்று சொல்லும் எழுத்தாளர் சோ.தர்மனின் மிக நீண்ட நேர்காணலோடு தொடங்கி , இருபதுக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டு வரும் அவலத்தைச் சொல்லும் நாக.இளங்கோவனின் கட்டுரை, பஞ்சமி நிலங்கள் தொடர்பான குணாவின் கட்டுரை, வேளாண் சூழலியலோடு வாழ்வியல் பின்புலத்தை அலசும் சு.வேணுகோபாலின் கட்டுரை, ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் அமரந்தாவின் கட்டுரையும் தனித்து கவனிக்கத் தக்கவையாக உள்ளன.