Last Updated : 07 Jul, 2018 10:03 AM

 

Published : 07 Jul 2018 10:03 AM
Last Updated : 07 Jul 2018 10:03 AM

திறனை உயர்த்தும் சமூக நீதி

டஒதுக்கீட்டுக்காக திறமை குறைவாக உள்ளவர்களுக்குக் கல்வியிலும் வேலையிலும் வாய்ப்பு தருவது பொருளாதார செயல்திறனைக் குறைக்கும் என்பர் சமூக நீதி எதிர்ப்பாளர்கள். திறமையைவிட சமத்துவம் முக்கியம்; பன்மைத்துவம் மேம்பட்ட விளைவைத் தரும் என்பர் சமூக நீதி ஆதரவாளர்கள். இவற்றுக்கு மாற்றாக, சமூக நீதியும் இடஒதுக்கீடும் திறன் மேம்பாட்டுக்கு அவசியம் என்று இக்கட்டுரை முக்கிய வாதங்களை முன்வைக்கிறது.

திறமை என்பது எல்லா சமூகக் குழுக்களிடமும் ஒரே சராசரி அளவில் உள்ளது என்பது இந்த வாதத்தின் முதல் படி. இதன் தொடர்ச்சியாக, மனிதர்களுக்கு இடையே திறமையில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம், இந்த ஏற்றத்தாழ்வும் எல்லா சமூகக் குழுக்களிலும் ஒன்றுபோல இருக்கும் என்பது இரண்டாம் படி.

A என்ற சமூகக் குழு 30% மக்கள்தொகையையும், மீதமுள்ள 70% மக்கள்தொகை B என்ற சமூகக் குழுவிடம் உள்ளது என்று கொள்வோம். இந்த இரண்டு குழுக்களின் சராசரி திறமை ஒரே அளவாக உள்ளது. சமூகத்தில் திறமை அதிகம் உள்ளவர்கள் 10% இருந்தால், அதில் 3% A குழுவினராகவும், 7% B குழுவினராகவும் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புக்கு திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் 3% A குழுவினராகவும், 7% B குழுவினராகவும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. ஆனால் நமது கல்வி, வேலைக்கான தேர்வு முறைகள் எல்லாம் இயற்கையான திறனை வெளிப்படுத்தாமல் இருப்பதாலும், அந்தத் தேர்வு முறைகள் A என்ற குழுவுக்கு சாதகமாக இருந்தால், அக்குழுவில் திறமை குறைவானவர்கள்கூட வேலைவாய்ப்பில் இடம்பிடிக்கலாம்; உதாரணமாக 5% என்று வைத்துக்கொள்ளலாம். இதனால், B குழுவில் திறமையான 7%-ல் 5% நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதனால், சமூகத்தின் மொத்த திறமை என்னவாகும்? A குழுவிலிருந்து திறமை குறைவானவர்கள் 2% பேர் வேலையில் உள்ளனர், அதே நேரத்தில் B குழுவிலிருந்து திறமையான 2% பேர் வேலை இல்லாமல் இருப்பர். இது சமூக இழப்பு இல்லையா? இந்த இழப்பைத் தவிர்க்க சமூக நீதியும், இடஒதுக்கீடும் தேவை.

இப்போது உள்ள தேர்வு முறைப்படி இயற்கையான திறமையுள்ளவர்கள்கூட ஒரு குறிப்பிட்ட வேலைக்குக் குறைவான திறமையுடையவர்களாக ஆரம்பத்தில் இருந்தாலும், அனுபவத்தால் அவர்கள் தங்கள் இயற்கையான திறமையை முழுவதும் பயன்படுத்தும் காலம் வரும். இதற்காக இடஒதுக்கீடு தேவை.

மேலும், எந்த ஒரு சமூகமும் அதீதமான ஏற்றத்தாழ்வையும், அடிப்படை வசதிகூட இல்லாத குடும்பத்தையும் ஏற்றுக்கொள்ளாது. ஓரளவுக்கு சமூகப் பொருளாதாரச் சமன்பாட்டை ஏற்படுத்த இடஒதுக்கீட்டு தேவை என்று இந்த கட்டுரை வலுவான காரணங்களை முன்வைக்கிறது.

Affirmative Action And The “Efficiency Argument” by Prof Prabhat Patnaik

http://www.anticaste.in/prabhat-

patnaik-on-affirmative-action/

- இராம சீனுவாசன்,

பொருளியல் நிபுணர்.

தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x