

கொளஞ்சியம்மாள் ஆயா தன் மகனை இழந்த துக்கத்தி லிருந்து மீள முடியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். அன்று நடந்த அத்தனை விஷயங்களையும் என்னிடமும் ஒருமுறை சொல்லி அழுதால்தான் தீரும் என்பதுபோல சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஒத்த புள்ளையின்னு நான் ஓவியமா வளர்த்தேம்மா. அவன் செத்துக் கெடக்கயில அவன் தலமாட்டுல குந்தி அழ முடியலம்மா...” என்னது புள்ளை பக்கத்துல உட்கார்ந்து அழக்கூட முடியலைன்னு சொல்லது. யாரு தடுத்திருப்பாங்க? அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்றபோதும் ஆயாவே சொல்லட்டுமென்று எதுவும் குறுக்கிட்டுக் கேட்காமல் இருந்தேன்.