

காலிஸ்பெல்: அமெரிக்காவின் மொன்டானா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, அங்கே நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது மோதியதில், பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
நான்கு பேரை ஏற்றிச் சென்ற ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் காலிஸ்பெல் நகர மொண்டானா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, அங்கிருந்த விமானங்கள் மீது மோதி தீவிபத்து ஏற்பட்டது. இதனை, காலிஸ்பெல் காவல்துறைத் தலைவர் ஜோர்டான் வெனிசியோ மற்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம், நிறுத்தப்பட்டிருந்த பல விமானங்கள் மீதும் மோதியதாகவும், இதனால் பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் காலிஸ்பெல் போலீஸார் தெரிவித்தனர். தீ அணைக்கப்படுவதற்கு முன்பு புல்வெளிப் பகுதிக்கு பரவியதாகவும் ஜோர்டான் வெனிசியோ கூறினார்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் நின்ற பிறகு பயணிகள் தாங்களாகவே வெளியேறினர். இந்த விபத்தில் சிறிய அளவில் காயமடைந்து 2 பேர் விமான நிலையத்திலேயே சிகிச்சை பெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.