

தொன்மத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல்கள் வெளிவருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெளியாகி இருக்கிற ‘தொரசாமி’ நாவலும், தொன்மத்தை முன் வைத்து சாம்பவர் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது.
கதையின் நாயகனான மதிக்குமாரின் வழியாக சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற இந்நாவல், கல்வி மட்டுமே சாதிய இழிவை அழிக்கும் ஆயுதம் என்பதை ஆழமாகச் சொல்கிறது. ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும் இன்னும் சாதிக்குள் ஆழ்ந்து கிடக்கிற, இந்த சமூகத்துக்குத் தொடர்ந்து கூவிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைப் பிரச்சாரமாக இல்லாமல் கதையோடு இணைந்து உரக்கச் சொல்கிறது இந்நாவல். அதனடிப்படையில் இந்த நாவல் பேசும் விஷயங்கள் முக்கியமானவை.