

எழுத்தாளரும் பெண்ணிய ஆய்வாளருமான பா.ஜீவசுந்தரி, ‘இந்து தமிழ் திசை’யில் எழுதிய, சமூகம் சார்ந்த சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தொடராக எழுதிய போதே வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், புத்தக வடிவில் இன்னும் கவனம் பெறலாம். பெண், இப்போதும் வேண்டாதவளாகவும் குடும்பத்தில் விரும்பப்படாதவளாகவும் ஏன் இருக்கிறாள் என்று கேள்வி எழுப்புகிற முதல் கட்டுரையிலிருந்து, ‘அதிகாரத்தின் வெளிப்பாடான பாலியல் அத்துமீறல்கள்’ என்கிற கடைசி கட்டுரை வரை ஒவ்வொன்றும் ஆழ்ந்து யோசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
‘பாலின பேதமற்ற சமூகம் அமையுமா?’, ‘பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்’, ‘கருச்சிதைவா... கண்ணியச் சிதைவா...’, ’தாய்ப்பாலும் விற்பனை சரக்கா?’, ‘பெண்களின் சொத்துரிமைகளும் சாதிய சமூகங்களும்’ என்பது உள்பட பல கட்டுரைகள், பெண்களின் பொருளாதார விடுதலை மற்றும் அவர்களின் உரிமை, சுதந்திரம் பற்றி புள்ளி விவரங்களுடன் பேசினாலும், ஒட்டு மொத்த சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றே அவற்றைப் பார்க்க முடிகிறது.