சமூகப் பிரச்சினைகளுக்கான அறிவியல் தீர்வுகள்! | நூல் வெளி
நம்மைச் சுற்றி நிகழும் எல்லாச் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் வியாக்கியானம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஒரு பிரச்சினை பற்றி வியாக்கியானம் செய்வதற்கு முன்பாக அப்பிரச்சினை தொடர்பான தரவுகளைத் திரட்டி அவற்றை அலசி ஆராய வேண்டும். விரிவான தரவுகள், வலுவான ஆதாரங்களின் மேல் நின்று கொண்டு பேசும்போதுதான், நமது வியாக்கியானம் வெற்றி பெறும். இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் பொறியாளர் மு.இராமனாதன் மறைமுகமாக இதனைத்தான் கற்றுத் தருகிறார்.
அவர், சிக்கலான பிரச்சினைகளையும் அறிவியல் நோக்கில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதில் வல்லவர். பல்வேறு இதழ்களில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் அனைத்தும் இந்த வகைப்பட்டதுதான். எந்தவொரு பிரச்சினையாக இருப்பினும், சர்வதேச அனுபவங்களையும், அறிவியல்பூர்வமான தரவுகளையும் முன்னிறுத்தி, உள்ளூர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அடுக்குவதில் மிகவும் தேர்ந்தவர். ‘தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு?’ என்ற இந்த நூலில் இடம்பெற்றுள்ள அவரது 19 கட்டுரைகளும், ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதைச் சொல்லித் தருகின்றன.
