

புகைப்படக்காரர் ஒருவரைப் பின்னணியாகக் கொண்டது இந்த நாவல். ஹைதராபாத், திருப்பூர், ஆனைக்கட்டி எனப் பல இடங்களில் நடக்கும் கதை இது. நாயகனான கிருஷ்ணன் சமைத்த தேநீர், தொட்ட பணம், உணவுப் பொட்டலம் எல்லாம் குப்பையில் வீசப்படுகின்றன. ஏனெனில் அவன் பிறப்பு அப்படிப்பட்டது. திருப்பூரை விட்டு ஹைதராபாத் சென்றால் போதையின் உச்சத்தில் நண்பனான ரமேஷும் அவனை இழிவு படுத்துகிறான். அவன் மீது காட்டப்பட்ட காழ்ப்புணர்ச்சி அவனை உந்தி மேலே உயர்த்துகிறது.
எண்ணங்களின் தொடர்ச்சியே இந்தக் கதை, காலம், இடம், பயணம் மாறி மாறி நம்மைத் தட்டாமலை ஆட்டுகிறது. கிருஷ்ணனின் சிந்தனைகளில், அவன் எண்ணங்களில் நாம் பல ரக வாழ்க்கையைப் பார்க்கிறோம். இலக்கியம் பத்தாம் நூற்றாண்டு மன்னர் பெருமை காட்டுவது அல்ல. நமது கால மக்களின் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை காட்டுவதே நீதி சார்ந்த இலக்கியம். இலக்கியத்திலும் அநீதிசார் இலக்கியம், நீதி சார் இலக்கியம் உள்ளன. அந்தப் பணியைத் திறம்படச் செய்துள்ளார் நாவலாசிரியர் சுப்ரபாரதி மணியன். - இராமன் முள்ளிப்பள்ளம்