

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவை. துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவை; வேதாகமத்தின் இந்தக் கூற்று, ஈழத்தமிழரின் மாபெரும் துயரத் தொடர்ச்சியோடும் பொருந்துகின்றன. முன்னர், தாம் கொல்லப்படுவதற்கு எதிராகப் போராடினார்கள். இன்றோ கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரவும் போராடுகிறார்கள். இனப்படுகொலைக் களத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகவுகளையும், அம்மைகளையும், அப்பன்களையும் எங்கேயெனக் கேட்டுப் போராடுகிறார்கள்.
சமகால ஈழ இலக்கிய ஆன்மாவின் குருதியூற்றில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ என்பது ஆதாரமானதாய் உருப்பெற்றுள்ளது. போர் சார்ந்த மானுடத் துக்கத்தை இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் ஈழத் தமிழர்கள் எழுதுவார்கள். கவிஞர் கருணாகரனின் ‘காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்’ கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள், மூச்சூறி மூளும் பிரார்த்தனையின் கடும் தவமாய்த் கொதிக்கின்றன.