

அ.முத்துலிங்கத்தின் மொழி பெயர்ப்பில் வெளியாகியிருக்கும் 'பூனை மனிதன்' சிறுகதைத் தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. ஃபாரா அகமது ஒரு பாகிஸ்தானியர். லண்டனில் வசிக்கிறார். ஓர் அலுவலுக்காக லாகூர் வந்தவர், அங்கு உயர்நீதி மன்றத்தைப் பார்க்கச் செல்கிறார். அங்கே ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தர்கள், வாதிகள், பிரதிவாதிகள், சாட்சிகள், காவலர்கள் எல்லோரும் ஆண்கள். நூலகத்தில் பெண் எழுத்தாளர் எழுதிய ஒரு புத்தகம் போலும் இல்லை.
“ஏன் இங்கே பெண்களே இல்லை, நீதிமன்றம் இருபாலருக்கும் சமநீதி வழங்கும் இடமல்லாவா”- ஃபாராவின் கேள்விக்கு, வளாகத்திற்கு வெளியே பென்சில், நோட்டுப் புத்தகம் விற்கும் ஒரு பெண் சுருக்கமாகப் பதில் சொல்கிறார்: “இங்கே அப்படியல்ல, நீங்கள் வெளிநாட்டவர் போல் இருக்கிறது”.