

நெருப்பு மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு. ஆனால், இதைப் பாகுப்பாட்டின்பேரில் சக மனிதர்களை அழிப்பதற்காகச் சிலர் பயன்படுத்துகின்றனர். மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே எழுதிய ‘கும்பல்’ நாவல் இதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. மகர் (பட்டியல்) இனத்தைச் சேர்ந்த சுதாமா, சாதிக்காரத் தெருவில் நடந்து சென்றதற்காக அவருடைய வீடு கொளுத்தப்படுகிறது. எரியும் வீட்டில் அவருடைய தந்தை உயிரோடு கொல்லப்படுகிறார்.
எலீ வீஸலின் ‘இரவு’ நாவலில் யூத இன அழிப்புக்காக நாஜிப்படை அமைத்திருந்த வதைமுகாம் நெருப்புக்குழியில் ஒவ்வொருவராக விழச் செய்கிற கொடூரம் உண்டு. அந்தக் கொடூரத்துக்கும் சுதாமாவின் தந்தையை எரியும் வீட்டுக்குள் தூக்கிப் போட்டுக் கொன்றதற்கும் இடையில் ஒரு வேறுபாடு மட்டும் உண்டு. அது சர்வாதிகார நாட்டில். இது ஜனநாயக நாட்டில். இங்கு சாதிதான் மிகப் பெரிய நெருப்புக்குழி.