

தமிழில் தலித் இலக்கிய உருவாக்கத்தின் பின்புலத்தையும் முன் நகர்வையும் குறித்த செறிவான உரையாடலாக அமைந்துள்ளது இந்த நூல். மராட்டிய, கன்னட, குஜராத்திய தலித் இலக்கியங்களின் தொடக்க முயற்சிகள், தலித் சிந்தனைகளிலும் அரசியல் புரிதல்களிலும் நிகழ்ந்த விவாதங்கள், தலித் இயக்கங்கள், கவிதைகள், புனைவுகள், அல்புனைவுகள், அரங்கச்செயல்பாடுகளில் தலித், தலித் அல்லாதோரின் பங்களிப்புகள் ஆகியன பற்றி வரலாற்றுணர்வோடு எழுதப்பட்ட பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க ஜோதி ராவ்புலே உருவாக்கிய ‘தலித்’ என்ற சொல் குறித்து அம்பேத்கருடைய நிலைப்பாட்டையும் பின்னாளில் இச்சொல் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த சொல்லாகச் சுருங்கிப் போனதுடன் சாதிக்கும், அதிகாரத்திற்கும் எதிராக எழுந்த தலித் இலக்கியம் குறிப்பிட்ட சாதியினர் எழுதும் இலக்கியமாகப் புரிந்து கொள்ளப்படுவதற்குப் பின்னுள்ள அரசியலையும், தலித் சொல் குறித்த ஆய்வாளர்களின் அறிஞர்களின் விமர்சனங்களையும், விவாதங்களையும் இந்நூலில் ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கிறார்.